Saturday, September 7, 2013

சீன் படம் பார்க்க ஆசைப்பட்டு சீரழிந்த பதிவர் - உண்மைச் சம்பவம்


பாய அறிவிப்பு: இப் பதிவில் வயது வந்தோருக்கான விடயங்கள் அடங்கியிருப்பதால், சிறுவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் இப் பதிவு உகந்ததல்ல.
பாகம் 02

ஒரு விடயத்தினைப் பற்றி நன்றாக அறிந்து, அனுபவித்துக் கொள்ளும் வரைக்கும் தான் அவ் விடயம் மீதான எம் ஆர்வம் அதிகமாகவும், அவ் விடயத்தைப் பற்றிய எமது மன உணர்வுகள் ஆசையினைத் தூண்டும் வகையிலும் அமைந்து கொள்ளும். உதாரணமாக புதிதாக அறிமுகமாகியுள்ள கையடக்கத் தொலைபேசி(அலை பேசி) மீது, அதனை வாங்கி, எம் கையால் அழுத்தி அனுபவிக்கும் வரைக்கும் தான் அத் தொலைபேசி பற்றிய ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருக்கும். அதே போலத் தான் எம் மனதில் எழும் பாலியல் சிந்தனைகளும், அவ் விடயத்தினைப் பற்றி அறியும் வரைக்கும் தான் ஒரு வித வெறியினைத் தூண்டும் வகையிலும், தூக்கத்தைக் கெடுக்கும் வகையிலும் அமைந்து கொள்வதுண்டு. 
சீன் பட சீடி- அந்தப் பட சீடி மீதான எனது ஆர்வமும் அப்படித் தான் இருந்தது. கம்பஸில் என்னோடு படித்த நண்பிகள்- நண்பர்களின் தூண்டுதல் மூலமாக,  என் மன உணர்வில் உருவாகிய மற்றப் படம் பற்றிய ஆசை, பின்னர் அதனை முழுமையாகப் பார்த்து அறிந்து கொள்ளும் வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பல்கலைக் கழகப் படிப்பினை முடித்த பின்னர், இலங்கையின் வன்னிப் பகுதிக்கு வந்து, அங்கே உள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரியத் தொடங்கிய காலப் பகுதி அது.
சீன் படம் பற்றிய கதை என்றாலே விடுதலைப் புலிகளின்(LTTE) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளவர்கள் போட்டிருக்கும் உடையுடன், நடு நடுங்கி சிறு நீர் கழிக்கும் அளவிற்குப் பயந்த காலப் பகுதி அது. புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளாக இருந்த பிரதேசங்களில் அரபு நாடுகளைப் போன்று, தடை செய்யப்பட்ட விடயங்களாக பாலியல் உணர்வினைத் தூண்டக் கூடிய அம்சங்களும், போதைப் பொருட்களும் விளங்கின. 

சீன் படத்தினைப் புலிகளின் பகுதிக்குள் கொண்டுவர யாராவது முயற்சி செய்கையில் அகப்பட்டாலோ, அல்லது, புலிகளின் பகுதிக்கு ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்ல யாராவது முயற்சி செய்தாலோ, அந் நபர்கள் புலிகள் கையில் மாட்டினால், நையப் புடைத்தல் என்ற பெயரில் பலரின் முன்னிலையில் வைத்து மானபங்கப்படுத்தப்ட்ட(அவமானப்படுத்தப்பட்ட) காலப் பகுதி அது. 

வன்னியில்- கிளிநொச்சியில் மாலை நேர அரட்டை- சைற் அடித்தல் மாநாட்டில், ஒவ்வோர் நாளும் வீரகேசரிப் பத்திரிகையில் வரும் வயது வந்தவர்களுக்கான புதிய படங்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்த்து அசடு வழிந்து, எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் உள்ளவர்களோடு பேசி வயிறெரிந்து கொள்ளுவோம். 
’’மச்சான், இஞ்ச பார்த்தியே...ஜிந்துப் பிட்டி முருகன் திரையில் இன்று ரம்பா நடித்த குயிலி படம் ஓடுதாம் என தியேட்டரில் ஓடும் படங்கள் பற்றிய விளம்பரப் பகுதியில் போட்டிருக்காங்கடா என்று ஒருவன் சொல்ல, மச்சான், அதை விடு, நேற்றைய பேப்பரில் ஒரு விளம்பரம் போட்டிருந்தாங்க. பார்த்தனியே. செக்ஸ் குயின் ஷகீலா நடிப்பில் அவள் அப்படித்தான் படம் கொழும்பு கொட்டாஞ்சேனை திரையில் ஓடுதாம் என்று விளம்பரம் போட்டிருக்காங்க என்று ஒருவன் சொல்வான். இப்படியே கைக்கெட்டிய கனி வாய்க்கு எட்டாத கதையாக நமக்குள் நாமே பலான படங்கள் பற்றிப் பேசி, ஏனைய ஊரில் உள்ள இளைஞர்கள் இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்கிறார்களே, நமக்குத் தான் அந்தக் கொடுப்பனவு இல்லையே என்று வயிறு புகைந்து கொள்ளுவோம். 

உயிரைப் பணயம் வைத்து உடல் இச்சையினைத் தீர்க்கும் காட்சிகளை புலிகள் பகுதிக்குள் கொண்டு வர, ரிஸ்க் எடுத்து றசுக்கு சாப்பிட யாரும் விரும்பாத காலப் பகுதியில் நானும், என்னோடு பணி புரிந்த இன்னோர் நண்பனும்; 2004ம் ஆண்டின் நடுப் பகுதியில்  கொழும்பிற்கு- என் நண்பனுக்குப் பாஸ்போர்ட் எடுப்பதற்காகச் சென்றிருந்தோம். இந்த முறை கொழும்பில் இருந்து வன்னிக்குத் திரும்பும் போது, எவ்ளோ கஷ்டப்பட்டாவது நாலைஞ்சு சீன் பட சீடியோடு தான் வன்னிக்குள் நுழைவது என்று ப்ளான் பண்ணித் தான் கொழும்பில் காலடி வைத்தோம்.  இதற்கென்றே எமது மாலை நேர அரட்டைக் குறூப்பிலிருந்து, ஒரு சிலர் சிறு தொகைப் பணத்தினைச் சீடி வாங்குவதற்காக தந்திருந்தார்கள். 

நண்பனுக்குப் பாஸ்போர்ட் எடுத்து முடிய, மச்சான் இன்றைக்கு எப்படியாவது சீன் பட சீடி வாங்கித் தான் ஆக வேண்டும், எங்களை நம்பித் தானே கூட்டாளிப் பொடியங்களும்(பசங்களும்) காசு தந்து விட்டவங்க. அதனால் கண்டிப்பாக சீடி வாங்கியே ஆக வேண்டும் என்று நான் ஒற்றைக் காலில் நின்றேன். என் ஆசையில் மண்ணள்ளிப் போடும் விதமாக, என் நண்பனோ, ’’முடியாது. இந்தப் படம் பற்றிய பேச்சை எடுக்காதே, இயக்கத்திடம்(புலிகளிடம்) மாட்டினால் என்ன பண்ணுவாங்க தெரியும் தானே? என்று மிரட்டிக் கொண்டிருந்தான். 
’’வேணும்னா வா, நாம ரெண்டு பேரும் தியேட்டருக்குப் போய்ப் பார்த்திட்டு வருவோம் என்று சொன்னான் நண்பன். அவனின் சொல்லை நம்பி, ஆளுக்கு எண்பது ரூபா செலவளித்து கொழும்பின் புற நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்குள் போனோம்.

போஸ்ட்டரில் மட்டும் நடிகை ஏதோ அப்பிடி இப்படிப் பண்ணுவது போன்ற தோற்றத்தில் விளம்பரம் ஒட்டி, அவள் அப்படித்தான் என்று எழுதியுமிருந்தார்கள்.  உள்ளே போய் உட்கார்ந்தால், சீன் படத்தில் சீனையே காணேல்லை. அடக் கடவுளே, ‘என்னடா மச்சான், சீனைக் காணேல்லை என்று பக்கத்தில் இருந்த நண்பனிடம் கேட்டேன். 
அவன் சொன்னான், 
‘’வெயிட் பண்ணு நீரு, அவசரப் படாதே. இப்போ கொஞ்ச நேரத்திலை சீன் வந்திடும்’’ என்று சொல்லித் தேற்றினான். படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரைக்கும் ‘நடிகை குளிப்பதைத் தான் திரும்பத் திரும்பக் காட்டினாங்கள். நடிகை பட சூட்டிங்கிற்கு முன்னர் குளித்திருக்க மாட்டா போலிருக்கே. அதுவும் ஓப்பினா குளிசாலும் கொடுத்த காசிற்குப் யூஸ்புல்லா இருந்திருக்கும். ஆனால் இடுப்பிற்கு கீழே துணியோடு தானே படம் தொடங்கி முடியும் வரைக்கும் குளிக்கிறா. 

நாதாரிப் பசங்க. எண்பது ரூபா கொடுத்துப் படம் பார்க்கிறோம். நடிகை குளிக்கிறதை முழுசாக் காட்டினால் குறைஞ்சே போடுவாங்கள்’ என்று நான் உணர்ச்சிவசப் பட என் நண்பனோ, ’‘நிரூ அடக்கி வாசி. நாம படம் பார்க்க வந்திருப்பது பிழையான ஏரியா. தியேட்டர் வாசலில் யார் நின்றவங்க என்று தெரியும் தானே. உன்னை ஒரே அமுக்கா அமுக்கி, நாறடிச்சிடுவாங்க’’ என்று சொன்னான். 

தமிழ் படம் பார்த்து, நொந்து தமிழ்ப் படத்தில் சீன் ஏதும் இல்லை, ஆங்கிலப் பெயர் கொண்ட, ஆங்கிலப் படம் வாங்கினால் சீன் கட்டாயம் வரும் என்ற நம்பிக்கையினை நண்பன் ஒருவன் வழங்கினான். கொழும்பில் உள்ள MC என அழைக்கப்படும் மஜெஸ்ட்டிக் ப்ளாஷா ஷொப்பிங் காம்பிளேக்ஸ் இற்குப் போனால் சீன் சீடி கிடைக்கும் என்று நண்பனும் சொல்ல, படம் பார்த்து முடிந்த கையோடு, சீடி வாங்கியே தீருவது என்ற நோக்கோடு சென்றோம். MC யில் உள்ள கடைகள் ஒவ்வொன்றாகத் தேடிப் பார்த்தோம். எந்தக் கடையிலும் அந்தப் படம் விற்பதற்கான அறி குறிகள் தென்படவில்லை. 
சரி எதுக்கும் உள்ளே போய்க் கேட்டுப் பார்ப்போம் என்ற துணிவில், ஒரு கடைக்குள் நுழைந்து Triple XXX படம் இருக்கா என்று கேட்க, கடையில் நின்ற சிங்கள விற்பனைப் பிரதிநிதி, ஒரு தொகை சீடிக்கள் கூட்டமாக குவிக்கப்ட்டுள்ள இடத்தினைக் காட்டினார். அப்பாடா....சீடிக்கள் நிறையத் தான் இருக்கே.  என்ற நம்பிக்கை வர நான்கு சீடிக்களைத் தூக்கினோம். சீடியின் கவர்களில் செம சூப்பரான கில்மாப் பட ஸ்டில்களைப் போட்டிருந்தார்கள். சேல்ஸ் மேனிடம் கேட்டேன்.
’’இந்தச் சீடிக்களில் கண்டிப்பாக சீன் இருக்கும் தானே;;. அவன் ஓம் என்று தலையசைத்தான். ’’அப்படீன்னா ஒரு தடவை டீவியில் போட்டுக் காட்டுங்கோவன் என்று நாவில் இருந்து எச்சில் ஒழுகாத குறையாக் கேட்டேன். அவனோ, முதலாளி பேசுவார். நாங்கள் சீடியை ஓப்பின் பண்ணுவதில்லை என்று சொன்னான். 

ஒரு சீடியின் கவரில் பமீலா அண்டர்சன் அந்த மாதிரி நிற்பது போன்ற ஸ்டில்லும், மற்றைய சீடியின் கவரில் முற்று முழுதான திவ்ய தரிசனத்தில் நடிகைகள் நிற்பது போன்ற தோற்றத்திலும் அட்டைப் படத்தினை வடிவமைத்திருந்தார்கள். 
(தமிழ் நடிகைகள் அல்ல). சீடி வாங்கியாச்சு. அடுத்த கட்ட நடவடிக்கை, சீடிக்களை பத்திரமாக வைத்து புலிகளது சோதனைச் சாவடியில் மாட்டிக்காது(செக் பொயிண்டில்) வன்னிக்குள் கொண்டு செல்வது தான் நோக்கமாக இருந்தது.

அதற்கான திட்டங்களையும் நானே செய்தேன். என்னிடம் இருந்த ட்ராவலிங் பாக்கில்(Travelling Bag) உட் பக்கத்தில்; அடிப் பக்கத்தையும், பாக்கினையும் பிரிக்கும் வண்ணம் இரண்டு மெல்லிய மரப் பலகையிலான மட்டையினை வைத்திருந்தார்கள். பாக்கிற்கு வெளியால் கையை வைத்தால் மட்டை தான் தட்டுப் படும். பாக்கிற்கு மேலால் கையை வைத்தாலும் மட்டை தான் தட்டுப் படும். சீடியின் கவர்களை வீசி விட்டு, தனியே சீடிக்களை மாத்திரம் இரண்டு மட்டைகளுக்கும் நடுவில் வைத்து, அதன் மேல் என் ஆடைகளை வைத்து பாக்கினைப் பூட்டிப் பயணத்திற்குத் தயாராகினோம்.
வன்னிக்குள் இருக்கும் நபர்களைப் புலிகள் கடுமையாகச் சோதனை செய்யமாட்டார்கள் என்ற நினைப்பில் எம் திட்டத்திற்கு சாதகமான முடிவுகளே கிடைக்கும் எனும் நம்பிக்கையில் பயணத்தினைத் தொடங்கினோம். இராணுவச் சோதனைச் சாவடியில் பாக் செக்கிங் பண்ணும் போது, சீடி இருப்பதற்கான எந்த விதமான தடயங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. ஒருவாறாகப் புலிகளின் சோதனைச் சாவடிக்கும் போயாச்சு. அங்கேயும் நமக்கு அதிஷ்டம். அவர்களும் பாக் செக்கிங் செய்தார்கள். ஆனால் சீடியினைக் கண்டு பிடிக்கவில்லை. 
வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், சீடியினை பாக்கினால் எடுத்துப் பத்திரமாக ஒளித்து வைத்தேன். வெற்றிகரமாகச் சீடியினை வன்னிக்குள் கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்பதனை மகிழ்ச்சிக்குரிய செய்தியாக, நண்பர்களோடு பகிர்ந்து கொண்டிருந்த வேளை, எங்கள் அரட்டைத் திடலுக்கு எப்போதாவது ஒரு நாள் வரும் எங்கள் நண்பனின் தம்பியார் நமது பேச்சினை ஒட்டுக் கேட்டு விட்டான். 
’’அண்ணே, அண்ணே; நானும் வாரேன் அண்ணே என்று கெஞ்சத் தொடங்க. அவனை எங்கள் கூட்டத்தில் உள்ள ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி, சீடி பார்க்க வந்தாய், உனக்குச் சங்கு தான் எனும்’’ தொனியில் எச்சரித்தும் விட்டான். 

நண்பன் ஒருவனது வீட்டில் அவனது வீட்டார் கோயிலுக்குப் போனதும், ஓடோடிப் போய் ஜெனரேட்டர்(சிறிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரம்) வாடகைக்கு எடுத்து, டீவி, சீடிப் பிளேயர் வாடகைக்கு எடுத்துப் படம் போடத் தொடங்கினோம். படம் தொடங்கியது. படத்தினை ஓட விட்டுப் பார்த்தும் ஒரு சீனையும் காணவில்லை. முழுசா காட்டாது, மூடி மூடித் தான் காட்டுறாங்கள்.

The Mummy, என்ற ஒரு படமும், பமீலா அண்டர்சனின் ஒரு படத்தினையும் போட்டு, மாறி மாறி Forward பண்ணிக் கொண்டிருந்தால், ஒரு சீனையும் காணவில்லை. நம்மட மூஞ்சியில் இழிச்ச வாயங்க என்று யாரோ எழுதி ஒட்டியிருப்பதால். தான் இப்படி ஒவ்வோர் தடவையும் ஏமாத்துறாங்க. இந்தா மூன்றாவது சீடியினைப் போட்டுப் பார்ப்போம் என்றால். கதவு ‘டொக்....டொக்....என்று தட்டும் சத்தம் கேட்டது.

இரண்டு புலி உறுப்பினர்கள் வாசலில் வந்து கதவினைத் தட்டினார்கள். இண்டைக்கு முதுகெலும்பு முறிஞ்ச கதை என்று மனதினுள் எண்ணியவாறு, கை கால்கள் நடுங்க - பயத்தினால் கண் முழி பிதுங்கி நிற்க ஓடோடிப் போய் கதவினைத் திறந்தோம். ‘தம்பியாக்கள், நீங்கள் இங்கே 'A' படம் பார்ப்பதாக அறிந்தோம். உங்கடை சீடிப் பிளேயரை செக் பண்ணிப் பார்க்கலாமோ என்று கேட்டார் ஒருவர்.  அடடா... ஏழரை நமக்கு உச்சியில் என்று, படம் பார்த்துக் கொண்டிருந்த நால்வரும், ஒருவரை ஒருவர் பார்த்து முழுச, ஒரு நண்பன் சொன்னான். ;;ஓக்கே அண்ணே, நீங்க வடிவாகப் பாருங்கோ. நாங்கள் 'A' படம் பார்க்கவில்லை.  பேய்ப் படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு பொய்யை வேறு அவிழ்த்து விட்டோம். 

வந்த புலி உறுப்பினரும், சீடிப் பிளேயரினுள் இருந்த படத்தினை ஓட விட்டுப் பார்த்தார். அது பேய்ப் படமா இருந்திச்சு. ஏமாற்றத்துடன், நாங்கள் தப்பான தகவலை அறிஞ்ந்து கொண்டு உங்களை செக் பண்ண வந்திட்டோம்; என்று சொல்லி விட்டு, ’’என்ன தான் இருந்தாலும், நீங்கள் இயக்கத்திடம் பெர்மிஷன் எடுக்காமல் படம் போட்டது தப்புத் தானே, என்று சொல்லியவாறு,  சீடிப் பிளேயரினுள் இருந்த சீடியினை சுட்டுக் கொண்டு போயிட்டாங்கள்.  
இயக்கப் பொடியங்கள் போய் முடிய, அவங்களுக்குப் பின்னாலை படம் பார்க்கத் தானும் வரட்டோ, என்று கேட்ட எங்கள் நண்பனான மாறனின் தம்பியார்- ஓடிப் போய்க் கொண்டிருந்தார்.

பின்னர், படம் பார்க்க ஆசைப் பட்டு, எங்களையும் போட்டுக் கொடுத்த குட்டிச் சாத்தானைத் தேடிப் பிடித்து ஆளாளுக்கு அபிசேகம் செய்து மகிழ்ந்தோம். அன்று மட்டும் அந்தப் படத்தோடை புலிகளிடம் மாட்டியிருந்தால், வட்டுவாகலில் பச்சை மட்டை அடி தந்து, சோடாப் போத்தல் மூடியால் பூங்கன்றுகளுகு நீர் பாய்ச்ச விட்டிருப்பாங்க. இனிமேல் சீன் பட ஆசையே வேணாம் என்று மறந்திருந்த காலப் பகுதியில், கடந்த காலப் போரின் பின்னர், தடுப்பு முகாமிலிருந்து மீண்டு, யாழ்ப்பாணத்திற்குச் சென்று வாழத் தொடங்கிய காலப் பகுதியில் ஒரு நாள் நெட் கபேக்குப் போய் இன்ரநெட்டை ஓப்பின் பண்ணினேன். 
அடடா.....ஹோம் பேஜ் இல் கூட(Home Page) இப்ப அந்தப் படம் தான் வந்து போகுதே. இது தான் அவங்கடை காலத்திற்கும், இவங்கடை காலத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்றாக இருக்கும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails