Thursday, September 26, 2013

காதல் ஒரு வக்கிர உணர்வு

'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....
அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், 
’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?
உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!

மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான்.
காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் நிலையிருந்தும் உணவினை மறக்கச் செய்யும். தூங்கும் வேளையிலும் விழிப்பைத் தந்து கனவில் அவளுடனோ இல்லை அவனுடனோ உலகின் எங்கோ ஓர் மூலையில் உள்ள பசுமை மிகு நிலத்தில் காதல் டூயட் பாடி ஆட வைக்கும். இந்தக் காதல் பலருக்குப் பல வித உணர்வுகளைத் தோற்று விக்கும்.
பாசத்தின் இருப்பிடத்திற்கு ஆதாரமாய் இந்தக் காதல் மனித மனங்களுக்குள்  வியாபித்திருக்கும்.

‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’
என்று பேசிய படி வகுப்பறைக்குள் இருந்த பதினெட்டு மாணவிகளுக்குள் நடு வரிசையில் இருந்த நேமிசாவை அவன் கண்கள் தேடிக் கொண்டிருந்தது.

தன் மனமெனும் குவியத்தினூடாகப் பட்டுத் தெறிப்படையும் உணர்ச்சியலைகளை, காதற் பெரு மூச்சாக்கி,  
ஒன்று திரட்டி, மூளையெனும் கடத்தி மூலம் செயற் பட வைத்து கண் எனும் பரா லைட்டின் மூலம் நேமிசாவின் கண்ணில் வெளிச்சம் பாய்ச்சினான் மிருதுளன். 
இவை யாவும் ஒரு கணப் பொழுதினுள் நடந்தேறிட,  தன் நிலையுணர்ந்து, அடடா மீண்டும் ட்ராக் மாறி விட்டோமே,

‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’
எனும் உணர்வுகளைக், கவிதைக்கு வேண்டிய கற்பனைகளைத் தந்து விடும் வல்லமை கொண்டது தான் இந்தக் காதல் என எங்கேயோ தொடங்கி, எங்கோயோ சொருகி, இடையில் பேச்சிற்கான தலைப்பிற்குச் சம்பந்தமில்லாத விடயங்களைச் செருகித் தனது பேச்சினை நிறைவு செய்தான் மிருதுளன். 

அவள், என் நினைவுகளைக் கிளறி விட்டு, உணர்வுகளை நீந்தச் செய்து விட்டு மௌனித்திருக்கிறாளே! எத்தனை நாளைக்குத் தான் இப்படி இருப்பாள், விரைவில் அவளிடம் என் மன நிலையினை உரைத்துப் பதில் பெற்றே தீருவேன் என மீண்டும் மீண்டும் அவளைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கத் தொடங்கினான் மிருதுளன். 

நேமிசா, வட்டக்கச்சி விதானையாரின் மூன்று பெண் பிள்ளைகளுக்குள் வந்து இடையில் செருகிக் கொண்ட இரண்டாமவள். நேமிசாவில் தான் வன்னியூரின் வளங்களில் இருந்து பெறப்பட்ட அழகு சேர்க்கும் தாவரங்களின் ஜீன்களை எல்லாம் பிரம்மன் ஒட்டிப் பிசைந்து உயிர் கொடுத்து ஓவியமாக்கியிருப்பான் என எல்லோரும் எண்ணி வியந்து கொள்வார்கள். 
வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல ஆண்கள் மனதிற்குள் தாகத் தீயை வார்த்துச் செல்வதிலும், தன் கூந்தல் அசைவோடு ஆண்களின் மனம்- உணர்வுகள் அனைத்தையும் அசைத்துச் செல்லக் கூடிய வல்லமையும்
நேமிசாவின் அழகிற்கு இருந்தது.

அழகென்றால் அப்படி ஒரு அழகு! அவளது அம்மம்மா தெய்வானை ‘என்ரை பேத்தியைத் தொடுவதென்றால் சவர்க்காரம் போட்டுக் கை கழுவித் தான் தொட வேண்டும்’ பாலப் பழம் போன்ற நிறம் என்ரை பேத்தி எனச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுவா. 

இத்தனை அழகுகளும் ஒருங்கு சேர்ந்த ஒற்றைச் சிலையினைத் தூண்டில் போட்டு வளைத்துப் பிடிக்கப் பல உள்ளங்கள் மாலை வேளையில் வீதியெல்லாம் படையெடுத்தாலும், அதிஷ்டம் மிருதுளனுக்குத் தான் என்பது மட்டும் எழுதப்படாத விதியாக இருந்தது. 

நேமிசாவின் நெற்றியோடு தன் விழிப் பார்வைகளைக் கலக்கச் செய்வதற்காய் ஒவ்வோர் நாளும் தவறாது பாடசாலைக்குப் போகும் மிருதுளன், 
ஒரு நாள் வேண்டுமென்றே பாடசாலைக்குப் போகாமல் நின்றான். 
அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்றதும், 
நேமிசா, நேற்று நான் பள்ளிக் கூடம் வரவில்லைத் தானே, 
உங்கடை சயன்ஸ் நோட் புக்கை ஒருக்கா தர முடியுமோ?
வீட்டை கொண்டு போய் விடுபட்ட குறிப்புக்களை எழுதிப் போட்டு, நாளைக்கு கட்டாயமா திரும்பவும் கொண்டு வந்து தாறேன்’
நேமிசா பிகு பண்ணத் தொடங்கினாள்.

ஆண்கள் சமரசமாய் தமக்கேயுரிய நிலமையிலிருந்தும் கீழிறங்கிப் பணிந்து பேசுவது பெண்களுக்குச் சாதகமான வழி என்பதை உணராத அப்பாவிப் பெண்ணல்ல நேமிசா, 
’நோட் புக் வேணுமென்றால் வேறு யாரிடமும் கேட்கலாம் தானே?
என்னிடம் ஏன் கேட்கிறீங்க? 

இல்லை, நீங்க தானே வகுப்பில நல்லா படிக்கிற பொண்ணு, அதோட உங்களோட ஹாண்ட் ரைற்றிங்(Hand Writing) தானே வடிவா இருக்கும், அதான் உங்களிட்ட கொப்பியை வாங்கினால் புரிந்து கொள்வதில் எனக்கு கஷ்டம் இருக்காது தானே, என்ன, தாறீங்களா?

‘இனியும் பிகு பண்ணல் தவறென்று உணர்ந்து ஓக்கே நான் நோட் புக் தாறேன், ஆனால் பத்திரமா நீங்க திருப்பிக் கொண்டு வந்து தந்திடனும், என் வாழ்க்கையே இதில தான் இருக்கு. அம்பலத்தார் காணியிற்குள் கள்ள மாங்காய் புடுங்கப் போகும் போது கொப்பியை மறந்து போய் விட்டிட்டுப் போறேல்லை, என ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டு நோட் புக்கினை மிருதுளனிடம் கையளித்தாள் நேமிசா. 

மிருதுளன் பள்ளிக்குப் போகாத காரணத்தால் விடுபட்ட தனது பாடக் குறிப்புக்களை எழுதத் தொடங்கினான். பாதிப் பக்கம் எழுதி முடிய முன்பே அவளின் நினைவுகள் கொண்டல் காற்றில் அவனைத் தாலாட்ட....வீட்டில் யாராவது தன் மேசைக்கு வருகிறார்களா என்பதைப் பார்த்து விட்டு, 
நெஞ்சோடு அணைத்தான், மேலும் கீழும் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான். கொப்பிக்கு முத்தம் கொடுத்தான். 

தீடீரென்று காதல் நரம்புகள் கிளர்ந்தெழுந்து அவனின் மூச்சுக் காற்றினுள் அவளைப் பற்றிய புரிதல்களைக் கிளறிப் போட, 
அவளது கொப்பியில் நேமிசா எழுதாது விட்ட நோட்ஸ் ஒன்றினைத் தேடி எடுத்து எழுதி முடித்தான். கொப்பியின் பின் புற மட்டையைப் பார்த்தான். 
’மிருதுவான தேகம் பூனைகளுக்கு மட்டுமல்ல-
பார்வைகளால் எனைக் கொல்லும் 
மிருதுளனுக்கும் பொருந்தும்! 
என அவள் காதல் டிசைன் போட்டு எழுதியிருந்தாள். காதல் அம்புக் குறியின் கீழே MN என அவள் வர்ணம் தீட்டியிருந்தான். 
(இப் பட உதவி: சகோதரன்- நிகழ்வுகள் வலைப்பதிவு கந்தசாமி)
மிருதுளன் தெளிந்தான். காதல் மோட்சம் கிடைக்கவுள்ளதாய் கனவு காணத் தொடங்கினான். அவளது கொப்பியில் அதே வரிகளுக்கு கீழே 
மனசிற்குள் மறைக்கின்ற நியாயம் என்ன?
மௌனத்தால் கொல்கின்ற வேசம் என்ன?
என எழுதி விட்டுத் தூங்கி விட்டான். மறு நாள் அவளிடம் பள்ளியில் வைத்துக் கொப்பியைக் குடுத்தான். 

அவளின் வசனத்தை அவன் படித்ததாகவோ, அவனின் வசனத்தை அவள் படித்ததாகவோ இருவரும் காட்டிக் கொள்ளவில்லை. சில நாட்களின் பின் ஒரு கடிதம் எழுதினான் மிருதுளன், தன் மனதின் எண்ண அலைகளை நான்கு பக்களில் கொட்டித் தீர்த்தான். வர்ணங்கள் தீட்டி, மேலும் கீழும் என கொப்பி ஒற்றையின் எல்லாப் புறமும் காதல் கவி வரிகளை எழுதி அவளிடம் கொடுத்தான் மிருதுளன். 

நாளடைவில் மிருதுளனுக்கு நேமிசா பதிற் கடிதம் வரைந்தாள். 
‘அன்பால் எனைக் கொன்று, உன் அழகால் என் மனதை வென்று, என்னுள் உறைந்திருகும் உயிரே! 
என்றென்றும் என் மனங் கவர்ந்த மிருதுளனே, எனத் தொடங்கித் தன் மன ஓட்டங்களை, எட்டுப் பக்கங்களில் வடித்துக் கொடுத்தாள் நேமிசா. 

மிருதுளன் இப்போது புதியதோர் உலகில் பறக்கத் தொடங்கினான். ரெட்பானா- விசுவமடு வீதியெங்கும் அவன் காற்றில் மிதப்பது போலக் கனவு காணத் தொடங்கினான். அவள் பெயரை நினைத்தாலே போதும், மனதிற்குள் எழுகின்ற இன்ப அலை மெது மெதுவாக கீழிறங்கி ஐஸ் கட்டி ஏதுமின்றி நடு வயிற்றினைக் குளிர் விக்கும் ஒரு அசிட்டினைச் சுரப்பது போன்ற உணர்வினைப் பெற்றான். 

வாரத்தில் ஒரு நாள் வீட்டாருக்குத் தெரியாது சந்திப்பதென்றும்,  வட்டக்கச்சி கந்தசுவாமி கோயிலின் பின் புறம் தான் தமது ரகசியச் சந்திப்பிற்கான பேச்சுவார்த்தை மேடை என்பதையும் தீர்மானித்தார்கள். 
நாளடவில் வாரத்தில் ஒரு நாள் என்பது, காதலின் முற்றிய நிலையின் காரணத்தால் வாரத்தில் இரு நாளாக மாற்றமுறத் தொடங்குகிறது. 

மிருதுளன் அவளைக் காணாத வேளைகளில், தன்னை மறந்தவனாய் அவள் நினைவுகளில் மூழ்கத் தொடங்குவான். அவள் இரட்டைப் பின்னல் கூந்தலோடு சைக்கிள் ஓடி வரும் அழகினைத் தனக்குள் மீண்டும், மீண்டும் கற்பனை செய்து மகிழ்ந்து கொள்வான்.

இந்த முறைக் கடிதத்தில் இப்படி எழுதுவோம் என முடிவெடுத்தான், 
’ஒட்டாமல் எட்ட நின்று பேசுவதன் அர்த்தமென்ன- உதடு
முட்டாமல் காதல் செய்யும் மர்மமென்ன??

காதலில் கிடைக்கும் முதல் முத்தம் இருக்கிறதே, அது எந்தக் காலத்திலும் மனசை விட்டு நீங்கி விடாது. அந்த முதல் முத்தத்தை நினைத்து - நினைத்து மனதில் பசுமை நினைவுகள் தாலாட்ட வாழும் உணர்வானது,  வார்த்தைகளுக்குள் உள்ளடக்கி கற்பனா ரதத்தில் ஏற்றி வரக் கூடிய எளிமையான உணர்வென்று கூறி விட முடியாது. 

அத்தகைய ஓர் உணர்வினைப் பெறுவதற்காய் மிருதுளன், நேமிசா இருவரும் காத்திருந்தார்கள். வெள்ளிக் கிழமை கந்த சுவாமியாரின் கோயில் பூஜை முடிந்த பிற்பாடு, நேமிசா குளக்கட்டின் வழியே முத்தம் வாங்கும் ஆசை மனதினுள் மையமிட, மிருதுளனைத் தேடி கோயிலுக்கு வருகிறாள். 
மிருதுளன் நாவில் எச்சில் முழுவதையும் தேக்கி, குருதிப் பரிமாற்றம் செய்வதற்காய் காத்திருக்கிறான். 

நேமிசா தனது சைக்கிளைப் பார்க் பண்ணி விட்டு வரும் வேளையில் தீடீரென வான் பரப்பில் இருந்து வட்டமிட்டுத் தாழப் பறந்த படி கிபிர் விமானங்கள் இரண்டு வட்டக்ச்சியினை நோக்கி உயிர் குடிக்கும் ஆசையில் வருகின்றன. வட்டக்கச்சி கோயிலுக்கு அருகாமையில் போட்ட குண்டுகள் தெறித்து வந்து நேமிசாவின் உடலைத் துளைத்துக் கொள்ள அவள் தரையில் சாய்ந்து விழுகிறாள். 

மிருதுளன் தன் உயிரினைப் பாதுகாப்பதா, இல்லை நேமிசாவின் உடலினைத் தாங்குவதா எனத் தெரியாதவனாய்ப் பிரம்மை பிடித்து நிற்கையில், தாம் வந்த நோக்கம் நிறை வேறிய மகிழ்ச்சியில் போர் விமானங்கள் இரண்டும் தம் இருப்பிடம் நோக்கி நகர்கின்றன. மிருதுளன் மட்டும் நேமிசாவின் நினைப்பில் அழுது கொண்டு அவள் உடலைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்குகிறான். 

எங்கிருந்தோ திடீரெனப் பறந்து வந்த ஆட்டிலறி ஷெல் ஒன்று மிருதுளனின் தலையினைச் சீவிக் கொண்டு சென்றது. அவ் வேளையில் வன்னிப் பெரு நிலப்பரப்பு முழுவதும் வெடியோசையால் அதிரத் தொடங்கியது. கிளி நொச்சி மாவட்டம் பாரிய இடப் பெயர்விற்காகத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்க, மிருதுளன் நேமிசாவின் உடலினை வீதியில் போட்டு விட்டு, இடம் பெயர்ந்து செல்லும் மக்களோடு தானும் நடக்கத் தொடங்கினான்!! 

டிஸ்கி: இக் கதைக்கான காதல் சின்னப் போட்டோ உதவி, சகோதரன்- நிகழ்வுகள் வலைப்பதிவு கந்தசாமி)

1 Comments:

Mahesh said...
Best Blogger Tips

ithu already unga blog la padichathu ache anna

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails