Friday, February 17, 2012

மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! பச்சோந்திகளின் கூட்டில் ஆரம்பமாகிறது!

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பாகவும், உலகத் தமிழர்களின் பெருமளவான பொருட் செலவுடனும், பங்களிப்புடனும், பிரமாண்டமான முறையில் திரைக்கு வரத் தயாராகிறது இத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பெயர் தான் மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! ஆசியாக் கண்டத்தில் உள்ள மங்களவர் கூட்டுத் தாபனத்தின் தயாரிப்பில், கோமான், சைக்கோ, மற்றும், வருவாய்நிதி, பனிமொழி, பொருமா, கொலைஞர், முதலிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும், ஸ்பெக்ரம் விருது புகழ் பாசாவின் இசையிலும் திரைக்குவரத் தயாராகிறது இந்தப் படம். இனித் திரைப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஹாலிவூட் திரை உலகத்தினையே ஒரு கணம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு; ஆங்கிலத் திரைப்பட உலகையே ஒரு கணம் புரட்டிப் போடுமளவிற்கு Inspired by true events (இப் படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை)எனும் அறிமுக டைட்டிலோடு ஆரம்பமாகிறது படம். படத்தின் கதைப்படி கதாநாயகர்களான சைக்கோ, மற்றும் கோமான் ஆகியோர் ‘அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் விமானத்தில் ஆசியாக் கண்டத்திலுள்ள மகிழ்நாடு எனும் இடத்திலிருந்து, அந்த நாட்டிற்கு அருகேயுள்ள சலங்கை எனும் நாட்டிற்குப் போகிறார்கள்.

போகும் வழியில் பல அடி உயரத்தில் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நின்று விடுகிறது. உடனடியாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பேந்தப் பேந்த முழி பிதுங்கிய இருவரும்; "இப்போ பிளேனை ஓட்டுறதுக்கு என்ன வழி?" அப்படீன்னு கேட்கிறார்கள். உடனே கதாநாயகர்களுள் ஒருவரான சைக்கோ அவர்கள் "கோமான் நீங்க அனல் பறக்கப் பேசினிங்க என்றால் பிளேன் பறந்திடும்!" என்கிறார், 

அதற்கு கோமானோ, "என்ன சைக்கோ சார் அப்பிடிச் சொல்லிட்டீங்க, நீங்க தானே என்னை விடப் பெரிய, முதிர்ந்த நடிகர், அப்ப நீங்களே பேசிடுங்க" எனச் சொல்லுகிறார். இதனால் கடுப்பாகிய நடிகர் சைக்கோ அவர்கள் கோமானின் கழுத்தைப் பிடித்து; "நீ பேசுறியா இல்லை, உன்னோடை சலங்கைத் தீவிற்கு ஆதரவான நடிகர்களின்ரை படத்தைப் புறக்கணிக்கச் சொல்லி, அடிக்கடி சொல்லுவாயில்லே. அந்தப் புலம்பலுக்கான, ரகசியத்தைப் போட்டுடைக்கவா என்றதும்,
தன்னையே ஒரு கணம் உற்றுப் பார்த்த இயக்குனர் கோமான், "ஓக்கே சைக்கோ நானே பேசிடுறேன் என்று பேசத் தொடங்குகிறார்.

‘’என் அன்புக்குரிய மகிழ் நாட்டு மக்களே, சலங்கை அரசிற்கு ஆதரவாய் அங்கு போய் கும்மியடித்து, குதூகலம் புரிந்த நடிகை பிசினைப் புறக்கணிக்கலாம். அதற்காக அவர் பஜயுடன் நடித்த காவலனை எப்படி நாம புறக்கணிக்க முடியும்? நடிகர் பஜய் இப்போது எனது அன்புக்கும், பண்புக்கும் பாத்திரமாகி நாம் மகிழ்வர் கட்சியிலும் இணைந்து விடுவார் போலிருக்கிறது. என்னோட தயவில் பகலவனிலும் கலக்கப் போகிறார். ஆகவே இன்று முதல் அனைத்துத் திரைகளிலும் அவர் படமே ஓடட்டும்!!
அப்படீன்னு கோமான் சார் பேசியது தான் தாமதம்; முற்பத்தி மூவாயிரம் அடிகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கையில் தொழில் நுட்பக் கோளாறால் கீழே விழும் வகையில் வேகமாகப் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த, விமானம் கோமானின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்டுப் பறக்கத் தொடங்குகிறது.

இந்தத் தொழில் நுட்பத்தை இப் படத்தில்; இயக்குனர் கோமான் அவர்களே (இப் படத்தின் இயக்குனர்) தனது உயிரையும், சைக்கோவின் உயிரையும் பணயம் வைத்து வானத்தில், அதுவும் 33,000 அடி உயரங்களுக்கு மேல் பழுதடைந்த விமானத்தினை அனல் பறக்கப் பேசி ஓட வைக்கும் வகையில், விமானம் விழுவதற்கு முன் டயலாக் பேசி வானத்தின் இடை நடுவில் வைத்து மீண்டும் விமானத்தைப் பறக்கச் செய்து எடுத்திருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். இக் காட்சியானது படத்தில் வரும் வேளையில்; ரசிக சிகா மணிகள் அனைவரும் நிச்சயம் தியேட்டரை விட்டெழுந்து கைதட்டித் துள்ளி மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இத் தொழில் நுட்பத்திற்கு இணையாக உலகில் இதுவரை எந்தவிதப் படங்களிலும் தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால் ஹொலிவூட் இயக்குனர்கள் கூட இவ் விடயத்தினை அறிந்து கோமானின் வீட்டை நோக்கிப் படையெடுக்க விசாவிற்கு விண்ணப்பிபதாக தகவல்களும் வெளியாகியுள்ளது. ’’என்னங்க கோமான் சார், உங்க பேச்சைக் கேட்டு ஆப் ஆன எஞ்சினே ஓர்க் பண்ணுது, ஆனால் ஏன் சார் பொட்டு வரும், பொட்டு வரும் என்று அடிக்கடி சொல்லுறீங்களே, அவர் இன்னும் வரலை? அப்படீன்னு ஓர் சுவையான கேள்வியினை நடிகர் சைக்கோ, கோமானைப் பார்த்து கேட்பதாக படத்திலோர் காட்சியுண்டு. இந்தக் காட்சியின் போது கோமான் சார் சொல்லும் பதிலிருக்கிறதே. தியேட்டரில் பல நாள் சிரிக்காத உம்மணா மூஞ்சிகளையும் விழுந்து விழுந்து சிரிக்கப் பண்ணும் வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை.

‘யோவ் சும்மா வாயை மூடிக்கிட்டு இருய்யா. நானே மக்களை வைச்சுக் காமெடி பண்ணிக் கிட்டு இருக்கிறன். நீ வேற.. என்னைய வைச்சு காமெடி பண்ணப் பார்க்கிறியா?பிளேனைத் திசை மாத்திக் கடலிலை இறக்கிடுவன். ஜாக்கிரதையா இருங்க சைக்கோ சார்!!” அப்படீன்னு சொல்லியதும் சைக்கோ வாயை மூடிக்கிட்டு கோமான் சார் முன்னாடி உட்கார்ந்திருந்து, பூலோகத்தில் மின் வெட்டு இடம் பெறும் மேட்டரை IPAD இல் பார்த்துக்கிட்டு இருக்காரு.

விமானம் பறந்து கொண்டிருக்க இருவரும் கண்ணை மூடுகிறார்கள். அப்போது படத்தின் முதலாவது பாடல் ஆரம்பிக்கிறது.
‘அடிப்பேன் திருப்பி அடிப்பேன்.. 
எனது புளுகால் சலங்கை ஆமிக்கு திருப்பி அடிப்பேன்
அடிப்பேன் திருப்பி அடிப்பேன்
எனது பேச்சால் உலகை அளப்பேன்....
இவ்வாறு பாடிக் கொண்டிருக்க விமானம் சலங்கை எனும் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் தரையிறங்குகிறது.

அபுகா ஜிபுகு குபுகா விமானத்திலிருந்து இறங்கி மண்ணைத் தொட்டுக் கும்பிட்ட பின்னர், கையில் உள்ள கடிகாரத்தை எடுத்து 19.05.2009 எனும் திகதியை மாற்றி, நாங்கள் எங்களிடம் உள்ள டைம் மெசின் மூலம் இப் போதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் போகப் போகிறோம் என்று கூறியதும் படத்தின் காட்சிகள் அனைத்தும் மாறுகின்றன.

படத்தின் கதைப்படி நாயகர்கள் சைக்கோ, மற்றும் சீமான் அவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி நேரத்தில் இறந்த ஒரு பெரியவரின் DNA அல்லது மரபணுவை எடுத்துக் கொண்டு மீண்டும் மகிழ் நாட்டிற்கு வருகிறார்கள். மகிழ் நாட்டில் உள்ள தமது ’வாய்ப் பேச்சு வீரம்’ எனும் ஆய்வு கூடத்தில் வைத்து மைக்ரோ பில்டர் கண்ணாடி (Micro Filter Glass) மூலம் ஒரு படைத் தலைவனையும், அவனுக்கு கீழே போராடும் வகையில் பல வீரர்களையும் சலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்காக விடுதலை வேண்டிப் போராடும் வண்ணம் உருவாக்கிறார்கள். 

இவர்களால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்கள் அனைவரும் இவர்களின் சொல்லினைக் கேட்டு, மீண்டும் ஒரு போர் வேண்டி சலங்கை நாட்டில்த் தரையிரங்கிப் போரினைத் தொடுக்கிறார்கள்.இறுதியில் "இந்த வாய்ச் சொல்லில் வீரர்களின் போலியான பேச்சினை நம்பி ஏமாந்திட்டமே" எனும் உண்மையினை உணர்ந்தவர்களாக மீண்டும் தங்களை உருவாக்கியவர்களான கோமான், சைக்கோ ஆகியோரைத் தேடி வந்து கடித்துக் குதறுவதுடன் இப் படம் முடிவடைகிறது. இதுவே இப் படத்தின் கதையுமாகும்.

படத்தின் சிறப்பம்சமாக தேனிசை தென்னப்பாவின்
"புலம் பெயர்ந்த மகிழர் நாங்கள் இருக்கிறோம்
போர் புரியும் உங்களுக்கு உதவுறோம்
நிலங்களை மீட்கையில் நிமிர்ந்து சிரிக்கிறோம்
நெஞ்சில் உமை போற்றி வியந்து ரசிக்கிறோம்" எனும் உணர்ச்சியான எழுச்சிப் பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பளிப் படிப்பை இடை நடுவில் கைவிட்டு விட்டு, பன்னிரண்டு வயதிலே போராடப் புறப்பட்ட இயந்திர மனிதர்கள், உணவோ உறக்கமோ இன்றி சளைக்காது போரிடும் காட்சி நிச்சயம் மனதை ஒரு கணம் உறையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்தக் காட்சியின் போது, ஓர் காலத்தில் ஈழத்தில் தடை செய்யப்பட்டிருந்த
"12 வயதினில் தோளிலே துப்பாக்கி எங்கே அவன் போகின்றான்....
பிள்ளை போராடத் தான் போகின்றான்" எனும் பாடலை மீண்டும் அனைவரும் பார்த்து + கேட்டு மகிழும் வண்ணம் தேடி எடுத்து இணைத்திருப்பது இயக்குனரின் பணிக்கு சான்றாக விளங்குகின்றது.

ஆனால் அடுத்த கணமே தமது பிள்ளைகளைப் படிக்கவும், சொகுசு வாழ்க்கை வாழவும் அனுப்பி விட்டு, இக் கள முனையில் நிற்கும் இயந்திர மனிதர்களைப் பார்த்து சில மனிதாபிமானமற்ற போர் வெறியர்கள் பேசும் காமெடி வசனங்கள் பலரது மனங்களிலும் ஆத்திரத்தை வர வைக்கும் வண்ணம் இயக்குனர் படத்தில் வசன அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

"அடியுங்கள்...அடியுங்கள்!  விடாமல் அடியுங்கள்!
முல்லைத்தீவில ஆமியா? நம்ம தலைவருக்கே சவாலா!!
என வசனங்கள் பேசுவதும்,
"ஊரிலை சனம் செத்தால் தான் எங்களின் வீட்டு உணவு மேசையில் சப்பாடு விழும்!"
"இனியொரு வெற்றிச் செய்தி கேட்காமல் வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போக மாட்டேன்......" என ஒரு சில வெளிநாட்டுத் தமிழர்களும் டயலாக் பேசி உணர்ச்சியினை ஊட்டுவதும் படத்தில் மனங் கவர்ந்த வசனங்களாக உங்கள் மனதில் பதியும் என்பதில் ஐயமில்லை.

படத்திற்குக் காமெடிக்குப் பஞ்சமே இல்லை எனும் வகையில் பிரபல காமெடி நடிகர் வருவாய் நிதி அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட பணியில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் நிதி அவர்கள் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதும், பின்னர் உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தினுள் ’’கழிப்பறைக்குப் போய் விட்டு வருகிறேன்’’ என்று புறப்பட்டு; மேடைக்குப் பின் புறத்தில் இருந்து ‘டாஸ்மாக் பியர்’ அருந்துவதும் பார்வையாளர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் சிரிப்பினை வர வழைக்கும் காட்சிகளாக அமைந்திருக்கின்றது.
படத்தின் ஒரு காட்சியில் வருவாய் நிதியுடன் ;காட்சிகளில் தோன்றிய துணை நடிகர் பாசா கைது செய்யப்பட்டவுடன், பாசாவை விடுவிக்கக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை வருவாய் நிதி அவர்கள் ஆரம்பிக்கிறாரு. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு சில மணி நேரத்தினுள் "மக்களே... என்னுடைய சொல்லுக்கு சத்திய அரசு இணங்கி விட்டது. நான் வழங்கப் போகும் தொகுதிகளை நம்பி, பாசாவை விடுதலை செய்ய;சத்திய அரசு இணங்கியதால்"நான் இப்போதே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் எனச் சொல்லி மேடையில் இருந்து இறங்குகிறார்.

இத்தகைய காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால்; பார்வையாளர்களின் கரகோசம், விசிலோசை முதலியவற்றால் தியேட்டர்களே அதிரப் போகுகிறது என்பது மட்டும் உண்மை. படத்தில் கவர்ச்சிப் பாடல் போடனும்; அயிட்டம் சாங்ஸ் வேண்டும்; எனும் சைக்கோ சாரின் கூற்றுக்கு அமைவாக நடிகையினைத் தேடி அலைந்த இயக்குனர் கோமான் அவர்கள் இறுதியில் ஊழல் வழக்கில் கைதாகி,  ஜெயிலில் இருக்கும் நடிகையான பனி மொழியினைக் கவர்ச்சிப் பாடலில் நடிக்கச் செய்திருப்பது படத்திற்குப் பிளஸ் பாயின்ட். பனி மொழியுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இப் படத்தில் தோன்றி நடனமாடியிருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம். உங்களுக்காக இப் பாடலினையும் இங்கே இணைத்துள்ளேன். நீங்களனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய பாடல் இது. 
இந்தத் திரைப் படத்தினை ஆங்கிலத் திரைப்படங்களான Splice, Piranha முதலியவற்றைத் தழுவி எடுத்திருப்பது போலத் தோன்றினாலும், படத்தின் பின்னணிக் காட்சிகளில் நிஜமான, உயிரையே பணயம் வைத்து நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், இப் படம் வேறு படங்களின் தழுவல் இல்லை என்பதையும் பார்வையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பது இயக்குனரின் அபிப்பிராயமாகும்.

நான்கு சுவருக்குள் இருந்த படி படத்தின் இசையினைப் பாசா அவர்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். இத் திரைப் படத்தினை, புதிய படங்களை வழமை போல நீங்கள் திருட்டு வீசிடியில் பார்த்து மகிழ்வது போலன்றி; தியேட்டரில் சென்று பார்த்து மகிழும் வகையில் 3D தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் படத்தில் பல பஞ்சு வசனங்கள் இடம் பெற்றிருப்பதால், உலகின் முதல் தரப் படங்கள் அனைத்தையும் விட மிக நீண்ட நாட்களுக்குத் தியேட்டர்களிற்கு வருவாயினை இப் படம் ஈட்டிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. 
உலகத் திரையரங்குகளில் எதிர் வரும் மே மாதம் காண்பிக்கப்பட இருக்கிறது மீண்டும் ஓர் ஈழ யுத்தம் திரைப்படம். ஆதலால் இப் படத்தினைப் பார்த்து விட்டு, உங்களின் விமர்சனங்களை எழுத தயாராகுங்கள்.
இப் பதிவானது, பதிவெழுத வந்து சில நாட்களில் எழுதிய பதிவு. பலரின் பார்வைக்கும் எட்டாதிருந்த பதிவினை, வாசகர்களின் பார்வைக்கு எட்டச் செய்யும் நோக்கில் சில திருத்தங்களோடு இணைத்திருக்கிறேன்.

14 Comments:

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பி

நிரூபன் said...
Best Blogger Tips

@வா.கோவிந்தராஜ்,4

தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பி
//

மறை கழண்ட கேசுக்கு தானே மறை கழண்டதோட பாசை புரியும்!

தமிழ்நாட்டு பதிவரை யாரும் கலாய்க்கலைங்கோ! நீ தவறாகப் புரிந்திருக்கிறீங்க

இப் பதிவிலும் தனியே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கலாய்க்கலை! ஈழ அரசியல்வாதிகளையும் கலாய்சிருக்கேன்! ஈழ மக்களையும் கலாய்ச்சிருக்கேன்!

தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே!

Thava said...
Best Blogger Tips

என் இனிய வணக்கம் நண்பரே,
@@ தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே! @@

இங்க நான் என்ன சொல்றது...பேப்பர், தொலைக்காட்சி பார்க்குறதோட சரிங்க, மற்றப்படி இந்த அரசியல், சினிமானு ஆழமாக எந்த விஷயமும் எனக்கு தெரியாது..ஆதலால், மன்னிக்கவும்.

மற்றப்படி பதிவ பற்றி என்ன சொல்வது..தங்களிடம் நான் எவ்வளவோ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது..உண்மையாவே ஒரு படத்துக்கு விமர்சனம் மாதிரியே உள்ளது...அதில் கொஞ்சம் அதிகமாகவே நக்கல் பொடியை சேர்த்து ரசிக்க செய்துள்ளீங்க.நன்றி.

urumal said...
Best Blogger Tips

நீங்கள் பிரதியிட்ட நாயின் படம் பொருத்மில்லை நாயிற்று நன்றி உணர்வு இருக்கின்றது.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!எல்லோரும் எல்லாவற்றையும் எப்போதும் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க இயலாதே?புரிதல் இல்லை என்கிற போது...................................நன்றி!

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா நலமா ,?
கலக்கல் பதிவு பதிவின் தலைப்பை பார்த்து அரசியல் கட்டுரை ஏன்னு படிக்க தொடங்கின ஈழ பிரச்சனை பற்றி படம் விமர்சனம் அப்பிடின்னு பார்த்த அதுவும் இல்ல . கலக்கலான கற்பனை கலாட்டா

Mahan.Thamesh said...
Best Blogger Tips

மச்சி அது சரி அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி நவீன தொழில் நுட்பங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன் நண்பா . ஏதேனும் இணைப்புகள் இருந்தால் கொடேன் .

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ஒருத்தரையும் விடம வம்பிளுத்திருக்கிறிர் ?

shanmugavel said...
Best Blogger Tips

நானும் இப்போதான் படிக்கிறேன்.ஏக கலாட்டா!

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

ஒவ்வொருவருக்கு கருத்து சுகந்திரம் இருக்கெனின் நாம் இறந்தகாலத்தை மீட்டுப்பார்ப்பதில் தவறே இல்லை.நகைச்சுவைபடைப்பாகினும் அதனூடா நூலோடி இருக்கும் விடயங்கள் குருதி படிந்தவையாக கண் முன்னே விம்பமாக தெரிய வைத்திருக்கிறாய் நிரு... படைப்பு காலைவாரும் போக்கில் அவர்களில் இறந்தகால செயல்பாடுகளை அள்ளீதூவியிருக்கிறாய் .நன்றாக இருக்கிறது.

Anonymous said...
Best Blogger Tips

தவறு செய்து விட்டீர்கள்...நாய் நன்றி உள்ளதாயிற்றே சகோதரம்...

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும், நன்றிகள்!

ரேவரி அண்ணா, மற்றும் சகோதரன் நிவர்சன்,
நாயின் படத்தினை கூகிளில் தேடி எடுத்து இப் பதிவில் இணைத்திருப்பது பொருத்தமற்றது தான்!
மன்னிக்கவும்.

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

நிரூபன் said...
@வா.கோவிந்தராஜ்,4

தம்பி உனக்கு மறை கலண்டுருசுனு நினைக்கிறேன் நல்ல டாக்டரா பாரு தமிழ்நாட்டு பதிவர கலாயித்த சரி இப்போ என்னடான அரசியல் தலைவர்களை நக்கலடிக்க்ற நீ தமிழ் பேசுற எழுதுற பாத்து எழுது தம்பி
//

மறை கழண்ட கேசுக்கு தானே மறை கழண்டதோட பாசை புரியும்!

தமிழ்நாட்டு பதிவரை யாரும் கலாய்க்கலைங்கோ! நீ தவறாகப் புரிந்திருக்கிறீங்க

இப் பதிவிலும் தனியே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கலாய்க்கலை! ஈழ அரசியல்வாதிகளையும் கலாய்சிருக்கேன்! ஈழ மக்களையும் கலாய்ச்சிருக்கேன்!

தமிழகத்து அரசியல் பத்தி விமர்சிக்க, கலாய்க்க ஒரு தமிழனுக்கு உரிமை இல்லையா? நாம யாருங்க! நாமளும் தமிழகத்து தமிழன் தானே! வரலாறு முக்கியம் அமைச்சரே!

உரிமை இருக்கு ஆனா நக்கலுக்கு அளவில்லையா?
வைகோ (ஈழ)தமிழ் மக்களுக்காக தனது அரசியல் வாழ்க்கையே அற்பனிதவர்

நிரூபன் said...
Best Blogger Tips

@வா.கோவிந்தராஜ்,

அன்பிற்குரிய நண்பா,
தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!. ஆனால் சீமான், வைகோ சில நேரங்களில் ஈழப் பிரச்சினையினை தமக்கு சாதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்!

ஒரு தடவை தமிழகத்தில் உரையாற்றும் போது புலிகளின் பொறுப்பாளர் நடேசனுடன் தான் தொலைபேசியில் பேசும் போது,
அவரது பேச்சிற்கு பின்னே குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்காரு

இங்கே யாரையும் அவமதிக்கனும் என்று எழுதலை நண்பா.
ஈழப் பிரச்சினையை எப்படி தமக்குச் சாதகமாக்கும் நோக்கில் தமிழகத்தில் இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் எனும் வகையில் வைகோ, சீமானின் நடத்தைகளை வைத்தே எழுதியிருக்கிறார்கள்.

ஈழ மக்களின் போராட்டம் பத்தி தமிழகம் வைகோ, சீமான் ஊடாக அறிந்து கொண்டது என்பது உண்மை தான்! ஆனால் இன்று அண்ணன் பிரபாகரன் இல்லாத காலத்தில் அவர் பெயரைச் சொல்லி, அரசியல் வளர்ப்பது, மக்களை ஏமாற்றும் நோக்கில் அரசியல் பிரச்சாரம் செய்து, அண்ணன் வருவார் என்று சொல்லி இவர்கள் நடப்பது எல்லாம் தமிழர்களின் தீர்வினைத் தள்ளிப் போடுமே தவிர, தமிழர்களுக்கு நல்ல சேதி கொடுக்காது!

அண்ணன் மறைந்த பின்னரும், அண்ணன் பிரபாகரன் வருவார், ஈழத்தை வென்றெடுப்பார் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டினால்,
மீண்டும் ஓர் போர் ஆரம்பிக்கும் அப்படீன்னு இவர்கள் கூறினால் எப்படி நண்பா, சிங்கள அரசு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க முன் வரும்?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails