ஈழத்திலுள்ள சாதியம் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களும், ஆக்க இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் வெளி வந்தாலும் இற்றை வரை ஈழத்திலுள்ள சாதிய முறையை எந்தவொரு மாற்றுக் கருத்து வல்லுனர்களாலும் உடைத்தெறிய முடியவில்லை என்றே கூறலாம். இந்தியாவின் தென் பால் அமைந்துள்ள இலங்கை எனும் சிறிய தீவில் ஆதிக் குடிகளாக இயக்கர், நாகர் எனும் இரு வர்க்க அமைப்பினர் வாழ்ந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் நாகரிகத்தாலும், வர்த்தக உறவுகளாலும் இரண்டறக் கலந்த இச் சிறிய தீவானது தன்னுடைய 700ம் நூற்றாண்டு காலப் பகுதியில் விஜயனது வருகையுடன் சிங்களவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது.
இக் காலப் பகுதி தொடக்கம், பின்னர் இடம் பெற்ற மேற்கத்தைய நாட்டவர்களின் வருகையின் பின்னர் வரையான இனவிருத்தி அடிப்படையில்; இற்றை வரை இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மாலைதீவினைச் சேர்ந்த மக்கள், எனப் பலதரப்பட்ட மக்கள் இன அடிப்படையில் வாழ்கின்றனர்/ வாழ்ந்து வருகின்றனர்.
இந்து மதம் கூறும் நால் வேதங்களின் அடிப்படையில் வருணாச்சிரமக் கோட்பாடுகள் தோற்றம் பெறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பண்டைய இடியுண்டு பூமிக்கு அடியில் புதைந்து போன நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களும் இந்த வருணாச்சிரமக் கோட்பாடுகளை எடுத்தியம்பி நிற்கின்றன. இந்துக்கள் தம்மைத் தாமே தாம் செய்யும் தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவினர்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது பிராமணர், ஷத்திரியர், சூத்திரர், வைசியர் என நான்கு வகையாகப் பிரித்திருந்தார்கள்.
இவர்களில் பிராமணர்கள் குரு குலங்களை அண்டி வாழ்வோராகவும், கல்வி கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும்,
ஷத்திரியர் போர் புரிந்து நாட்டினைக் காக்கும் குடிகளாகவும்,
வைசியர்கள் பொருளீட்டும் பாணியில் வியாபாரம் செய்வோராகவும்,
சூத்திரர்கள் - வியர்வை சிந்தக் கை கட்டி, வாய் பொத்தி, ஏவல் வேலை செய்து சரீரத்தால் இம் மூன்று சாதியினருக்கும் உழைக்கும் அடிமைகளாக, அல்லது ஏவலாளர்களாகவும் (Slaves) சித்திரிக்கப்பட்டிருந்தார்கள்.
ஈழத்தின் வட பால் எழுந்த வரலாற்று நூல்களான செகராசசேரக மாலை, பரராசசேகர மாலை முதலியவற்றின் அடிப்படையில் இப்போது சமூகத்தில் காணப்படும் சாதிய முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டிருக்கவில்லை. மன்னர்களுக்கு பூமாலை கட்டுவதெற்கென்று ஒரு சமூக அமைப்பும், அந்தப்புற வேலைகளில் ஈடுபடுவதென்று ஒரு அமைப்பும், ஆலயங்களை சிரமதானம் செய்யும் பணியில் இன்னொரு அமைப்பும், ஒற்றர்களாக ஒரு சில குழுக்கழும், கல்வி கற்பிக்கும் செயற்பாடுகளில் பிறிதொரு குழுவும், விவசாய அடிப்படையில் ஒரு சில குழுக்களும் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் செப்புகின்றன. நிலப் பிரபுத்துவ அடிப்படையிலான ஆங்கிலேய அல்லது மேற்கத்தைய நாகரிக வருகையினைத் தொடர்ந்து முதன்மையடைந்தாலும் இன்று சமூகத்தில் காணப்படும் இச் சாதிய முறைகள் எப்போது, எப்படி ஈழத்தில் தோற்றம் பெற்றன?
இற்றைக்கு 7000ம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே நிலப்பகுதியாகவே இருந்திருக்கின்றன, குமரிக் கண்டத்தினைத் தாக்கிய ஆழிப் பேரலைகள் அல்லது நிலநடுக்கத்தின் பின் விளைவாகவே இலங்கையானது இந்திய உபகண்டத்திலிருந்து துண்டாடப்பட்டுள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றாகும். இதனடிப்படையில் ஆரம்ப காலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்று பிரிவுகள் பற்றி அறிய முடியாமைக்கான பிரதான காரணம் தமிழர்கள் கிறிஸ்துவிற்குப் பின் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே தமது வரலாற்றினை எழுதும் மரபுகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கியமை ஆகும்.
சிங்கள இன மக்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் தொகுக்கப்பட்ட பாளி நூல்களின் அடிப்படையில் கிறிஸ்துவிற்குப் பின் மூன்றாம் நூற்றண்டளவில் எழுதப்பட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு
‘’எளார என்ற பெயருடைய சத்திரியன் அஸேஸனை வெற்றி கொண்டு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்’’ எனவும்
கிபி ஐந்தாம் நூற்றாண்டளவில் தீபவங்கஸ்த்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சத்தில்(சிங்கள வரலாற்று நூலில்)
’’சோழ நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ''உயர் குடிப் பிறந்த ‘எளார என்னும் தமிழன் அஸேஸ மன்னனை வென்று நாற்பத்தி நான்காண்டுகள் தகராறு தீர்ப்பதில் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் சமநீதி செலுத்தி ஆண்டான் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் பகுதிகளில் இச் சாதிய அமைப்புக்கள் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வந்தாலும்; மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு முதலிய பகுதிகளில் எவ்வாறு இச் சாதிய முறைகள் விரிவடைந்திருந்தன? வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் வன்னி இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின், மூதாதைகளின் வம்சங்களானது மட்டுவில், சரசாலை, புத்தூர், நீர்வேலி, மற்றும் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களை அண்டிய மக்களின் வம்சங்களுடன் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்படியாயின் பிராமணர்கள், கரையார், சைவர்கள், வெள்ளாளர் அல்லது வேளாளர், தனக்காரர், கோவியர், முக்கியர், பள்ளர், பறையர், நளவர், செட்டியார், தோட்டக்காட்டார், பத்தர், தச்சர், கொல்லர், வண்ணார் (இதில் ஏதாவது சாதிகள் விடுபட்டிருந்தால் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்) முதலிய சாதிகள் தொழில் அடிப்படையில் ஈழத்தில் எப்போது உருவாகியது, இதனை யார் உருவாக்கினார்கள்? ஊர்களிலும், கிராமங்களிலும் வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளுக்கும் வெவ்வேறு சாதிகளை குடியமர்த்தும், சாதிகள் பிரிந்திருக்கும் வழக்கம் எப்போது உருவாகியது, இதனை உருவாக்கியவர்கள் யார், சாதிகள் அடிப்படையில் கோயில்களை உருவாக்கி ஏனைய சாதியினரை அல்லது கீழ்ச் சாதியினரைக் கோயில்களுக்குள் செல்ல விடாது தடுக்கும் புறக்கணிக்கும் நிலையினை உருவாக்கியவர்கள் யார்? இவை யாவும் எம்முள் தொக்கி நிற்கும் வினாக்கள்.
சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? இத்தகைய தொக்கி நிற்கும் மேற்கூறப்பட்ட வினாக்களிற்கான விடைகளோடும், சாதியம் பற்றித் தாழ்ந்த சாதிகள் என்று புறக்கணிக்கும் அடிப்படையில்(பள்ளு இலக்கியங்கள்- பள்ளன், பள்ளி கதாபாத்திரங்கள்) நேரடியாகச் சுட்டும் வகையில் உருவான இலக்கியங்களையும், சாதியத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்த நூல்கள், புரட்சிகள் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம்.
ஈழத்தில் சாதியம் இன்னும் வளரும்.........
மூலாதாரங்கள்: செகராசசேகர மாலை, கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் நூல், கலாநிதி குணராசாவின் வரலாற்று நூல்கள், ஈழத்து இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், யாழ்ப்பாண வைபவ மாலை.
|
68 Comments:
சரியாகவே ஆரம்பித்திருக்கிறீர்கள்!ஆனால் தோட்டக் காட்டார் என்று ஒரு சாதி இல்லை!ஆங்கிலேயர்களால் இலங்கையில் மலைப்பிரதேச தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு வேலைக்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டோரை யாழ்ப்பாண மேட்டுக் குடியினர் "தோட்டக் காட்டார்" என அழைப்பார்கள்.சாதி பிரித்தவர்கள் பெரும் நிலச் சுவாந்தர்களாக இருந்து குறு நில மன்னர்களானோர் என்றே நினைக்கிறேன்.
YOGA.S said...
சரியாகவே ஆரம்பித்திருக்கிறீர்கள்!ஆனால் தோட்டக் காட்டார் என்று ஒரு சாதி இல்லை!ஆங்கிலேயர்களால் இலங்கையில் மலைப்பிரதேச தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு வேலைக்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டோரை யாழ்ப்பாண மேட்டுக் குடியினர் "தோட்டக் காட்டார்" என அழைப்பார்கள்.சாதி பிரித்தவர்கள் பெரும் நிலச் சுவாந்தர்களாக இருந்து குறு நில மன்னர்களானோர் என்றே நினைக்கிறேன்//
வணக்கம் சகோதரா, இலங்கையில் அதுவும் நீங்கள் கூறுவது போல யாழ்ப்பாண மேட்டுக் குடிகள் தான் மலைய மக்களை தோட்டக்காட்டார் என அழைப்பார்கள். அவர்களையும் வட கிழக்கு மக்கள் ஒரு சாதியினராகப் பிரித்துப் பார்ப்பார்கள். அச் சம்பவத்தினை விளக்கவே இப் பதம்.
உங்களின் முதற் கருத்திற்கு நன்றிகள்.
மலையக மக்களின் சாதியப் போக்குகள் பற்றிப் இன்னொரு பதிவில் விரிவாக எழுதவுள்ளேன்.
மேட்டுக்குடி என்றால்..
///// வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் ////
இப்போ அந்தளவுக்கு இல்லை... அதிகமாய் மனிதம் வாழ்கிறது...
நண்பா உங்கள் விரிவான விளக்கமான கட்டுரை மலைக்க வைக்கிறது! உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி சொல்லட்டுமா? உண்மையில் இப்போது சாதிப்பாகுபாடுகள் எங்கே மிகக் கடுமையாகப் பார்க்கப்படுகின்றன தெரியுமா? இங்கு வெளிநாடுகளில்தான்!!
யாழ்ப்பாணத்தில் இப்போது சாதி இருக்கோ இல்லையோ தெரியாது! ஆனால் அத்தனை சாதிகளும் பிரான்சிலும், லண்டனிலும், கனடாவிலும்தான் உயிர்வாழ்கின்றன! இந்த கேவலமான நிலைபற்றி உங்களுக்கு, நேரம் போது விரிவாக எழுதி அனுப்புகிறேன்!!
நன்றி சகோதரம்!!
இப்பதிவு ஒரு பொறியாக அமைந்தாலும், இப்பதிவில் ஏகப்பட்ட பிழைகளும், சொந்த அனுமானங்களும் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது.
இலங்கை மக்கள் அத்தீவில் தோன்றியவர்கள் இல்லை. எதோ ஒருக் காலக்கட்டம் முதல் இன்று வரை வெளியில் இருந்து வந்த மக்களை உள்வாங்கிக் கொண்டு வந்த மக்களைக் கொண்ட நாடு.
ஆதிக்குடிகளாக நெக்ரிட்டோக்கள் அந்த தீவில் தென்னிந்தியாவில் இருந்து தரை மார்க்கமாக சென்றிருக்க வேண்டும்.....
பின்னர் எழுந்த தமிழர்கள் அங்கு சென்றிருக்க வேண்டும், பின்னர் ஆரியர், சாவகர், அரபு, வெள்ளையர், என மாறி மாறி குடியேறி இருக்க வேண்டும்.
பதிவரின் மையக்கருத்து இலங்கையில் இருக்கும் சாதிகள் தொழில் அடிப்படையிலானவை எனவும், அவை பிற்காலத்தில் வந்தவை என கூற முனைகிறார்.
//ஈழத்தின் வட பால் எழுந்த வரலாற்று நூல்களான செகராசசேரக மாலை, பரராசசேகர மாலை முதலியவற்றின் அடிப்படையில் இப்போது சமூகத்தில் காணப்படும் சாதிய முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டிருக்கவில்லை//
புராதனக் காலம் என நீங்கள் கூறுவது எதனை? 500 ஆண்டுகளுக்கு முன்னரா? 1000 ஆண்டுகளுக்கு முன்னரா? 2000 ஆண்டுகளுக்கு முன்னரா? நீங்கள் மேற்கூறிய இரு நூல்களும் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. அவற்றில் சாதிய முறை எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என விளக்கினால் சுபம். //ஆரம்ப காலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்று பிரிவுகள் பற்றி அறிய முடியாமைக்கான பிரதான காரணம் தமிழர்கள் கிறிஸ்துவிற்குப் பின் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே //
7000 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆழிப் பேரலை இலங்கையையும் தென்னிந்தியாவையும் பிரித்தது என்பது புவியியல் ஆய்வாளர்களின் கருத்து. அப்படி நிற்க கி.பி 17 - ம் நூற்றாண்டு வரை அந்த ஆழிப் பேரலையின் தாக்கத்தால் ஈழத்தமிழர் தமது வரலாற்றை எழுதாமல் இருந்ததற்கான காரணம் என்ன?
உண்மையில் தமிழர்கள், தமக்கான ஒரு வரலாற்றை ஒரு போதும் எழுதியது இல்லை. ஆனால் தமிழ் வரலாறுகள், மன்னர் பாமாலைகளாலும், சங்கப் பாடல், போன்ற பல்வகை இலக்கியங்களாலும், கல்வெட்டுகளாலும் தான் கட்டப் பட்டு இருக்கின்றன.
சங்கப் பாடலில் வரும் ஈழத்து நாகனார் மற்றும் ஈழத்து குடுமிகன் எனறக் கல்வெட்டு மட்டுமே ஈழத்தமிழ் வரலாறு சொல்கின்றது. அதற்கு முன்னரோ, பின்னரோ, யாழ்ப்பாணத்திலோ, இலங்கையிலோ, ஆளுகை செய்த எந்தவொரு தமிழ் மன்னர்களின் கல்வெட்டோ, பாடல்களோ இல்லை ஏன் ????
அதேபோல மகாவம்சத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவை பல்வேறு சிறு சிறு தமிழ்மன்னர்கள் ஆண்ட செய்தி சொல்கின்றன. நீண்ட பரம்பரை ஆட்சி செய்ததாக தெரியவில்லை. ஒன்று வடக்கு இலங்கை தொடர்ந்து பாண்டியரின், சோழரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்து இருக்க வேண்டும். களப்பிரரின் ஆட்சிக் காலத்தில் சிங்களவரின் ஆளுக்கைக்கு உட்பட்டு இருந்து இருக்க வேண்டும். அங்கு நிரந்தர குடிகள் 13 நூற்றாண்டுக்கு பின்னர் தான் ஏற்பட்டு இருத்தல் வேண்டும். அதனை யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூல் தெளிவாக யாழ்ப்பாணப் பகுதிகளில் இந்தியக் குடியேற்றத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
நீங்கள் கூறவிழையும் பிராமணர் முதல் வண்ணார் வரையிலான சாதிகள் அதற்கு பின்னரே இலங்கையில் குடியேறி இருத்தல் வேண்டும். அதே போல இலங்கையில் வாழும் பெரும்பாலான சாதிகள் தம்மை வேளாளர், பிரமாணர் என்றுக் கூறினாலும், அனைவருமே சூத்திரர், வைசியராகத் தான் இருத்தல் வேண்டும். காரணம் பிராமணர்கள் கடற்பயணம் செய்வது வேதம் தடை செய்கிறது, அப்படியானால் 7000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை ஒன்றாக இந்தியாவோடு இருக்கும் போது பிராமணர்கள் அங்கு சென்றிருக்கலாம் என்பது ஏற்கமுடியாத ஒன்று. அப்படி என்றால் இலங்கையில் உள்ள ஆதிக்கச்சாதியினர் இந்தியாவில் இருந்து 13 நூற்றாண்டளவில் அங்கு சென்று குடியேறி இருத்தல் வேண்டும். அவர்கள் தம்மை தாம் வேளாளர் என்றும் பிராமணர் என்றும் அழைத்திருக்க வேண்டும். அதேக் காலக்கட்டதில் சோழ நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தமையால். பெரும்பாலன சோழ குடிகள் அச்சம் காரணமாக வட இலங்கைக்கு புலம் பெயர்ந்து இருக்க வேண்டும். அதனால் தான் புராதன சாதிகள் தற்சமயம் இலங்கையில் இல்லை.....
சோழ குடிகள் அங்கு செல்லும் முன் மீனவர்களும், சாணர்களுமே இலங்கைய்ல் நெடுங்காலம் ஆட்சி செய்தும், வாழ்ந்தும் வந்துள்ளனர். இவர்கள் பேசிய மொழி தமிழா, சிங்களமா, கலப்படமா என்பது ஆய்வு செய்ய வேண்டியவை.
சாதிகளும் குடியேற்றங்களும் எவ்வாறு உருவாகி இருக்கும் என யாழ்ப்பாணச் சரித்திரம் விரிவாக கூறுவதைத் தாங்கள் படித்தால் புலப்படும். அது மட்டுமின்றி தாங்கள் கேட்ட மற்றொரு கேள்வி யாழ்ப்பாணத்தில் வேளாளரின் ஆதிக்கம் எப்படி வந்தது என?
ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் வேளாளரின் ஆதிக்கம் வந்தது எனக் கேட்டால் அதன் விடைக் கிடைக்கும். நான் கூறியது போல இலங்கையில் 13 நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மக்கள் மீனவர், சாணர் எனப்படும் ஈழவர். ஈழவர் என்போர் இன்றும் கேரளத்தில் வாழ்கின்றனர். அவர்கள் ஈழத்தில் இருந்து கேரளா சென்றவர்களா? இல்லை கேரளத்தில் இருந்து ஈழம் சென்றவர்களா எனக் குழம்பி ஆராய்கையில். அவர்கள் அனைவரும் பனை மரம் ஏறும் தொழில் புரியும் நாடார் வழி வந்தவர்கள். அவர்கள் தான் ஒருக் காலத்தில் இலங்கைக்கு சென்று அங்கு வாழ்ந்திருக்க வேண்டும். இதனை அவர்களின் மரபு வழி புராணம் தெளிவாகக் கூறுகின்றது. அது மட்டுமின்றி, அது சாணர் தலைவன் ஒருத்தன் பாண்டிய இளவரசி ஒருத்தியை மணந்து இலங்கைக்கு சென்றுக் குடியேறியதாக கூறுகின்றது என ஒரு சாணர் தெரிவித்தார். [ http://en.wikipedia.org/wiki/Ezhava#Legend ]
அதாவது இலங்கைக்கு குடியேறிய சிங்களவர்கள் உண்மையில் ஆரியனும் இல்லை, வடநாட்டவரும் இல்லை. எல்லாம் புனைவு ! அவர்கள் இலங்கைக்குக் குடியேறிய சாணர் மற்றும் மீனவர். பிற்காலத்தில் பௌத்த மதத் தாக்கத்தால் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். இலங்கையின் வடக்கே வாழும் வேளாளர்கள் இலங்கையில் குடியேறியது மிகவும் சமீபத்தில் தான். அதாவது கிபி 13 நூற்றாண்டில் தான். ஆரிய சக்கரவர்த்திகள் ஒரு அரசை நிறுவியதன் மூலம் தமிழகத்தில் இருந்து வந்த அகதிகள் யாழ்பாணத்தினை தமதாக்கி கொண்டனர். அங்கிருந்த பூர்வக் குடிகளை அடிமைகளாக்கி நழவர் ( ஈழவர் ), பள்ளர், பறையர் என அழைத்தது.
அத்தகைய காலத்தில் தான் முறையான குடியேற்றத்தை வடக்கில் கட்டி எழுப்பினார்கள். அவர்களோடு தான் 18 தொழில் செய்யும் சாதிகளும் வந்தன ( வண்ணார், கொல்லர், தக்சர், மறவர், வன்னியர் ). இப்படித்தான் இலங்கையின் சாதிக்கட்டமைப்புகள் ஏற்படலாயின .......... மற்றொன்று சிங்களவர்களின் ஆளும் வர்க்கத்திலும் இவர்கள் கலப்புற்று ஆட்சி அதிகாரங்களைப் பெற்றனர். இது தான் கோவிகம என்னும் சாதியாக உருவாகின. உண்மையான இலங்கை மக்கள் சிங்களவரிலும் சரி, தமிழர்களிலும் சரி சாணர், மீனவர் மட்டுமே.
ஆகவே தான் இலங்கையில் தமிழ் இலக்கியங்களோ, கல்வெட்டுகளோ ஏற்படுத்தவில்லை. பல்வேறு கல்வெட்டுகள், அல்லது தமிழ் மன்னர்கள் அனைவரும் சோழ் நாட்டில் இருந்து வியாபார ரீதியாக ஆண்ட மன்னர்கள். சிங்கள் இலக்கியங்கள் ஒரு போதும் பாண்டிய நாட்டினையோ, சேர நாட்டினையோ இகழ்ந்தது இல்லை. காரணம் பாண்டிய நாட்டின் சாணர்களே இலங்கையில் குடியேறி சிங்களவர்களும், தலித் தமிழர்களாகி இருந்தனர். அவர்களின் எதிரிகள் சோழர்களே ! இந்த சோழ எதிர்ப்புணர்வை தற்கால சிங்கள் இனவாதிகள் சரியாக தமிழ் எதிர்ப்புணர்வாக மாற்றி உண்மை வரலாற்றை மறைத்து உள்ளனர்.
என்னுடைய பெரும் பதிலுக்கு மன்னிக்க. வேண்டுமாயின் இதனை ஒருப்பதிவாகப் போடலாம்..................
கந்தசாமி. said...
மேட்டுக்குடி என்றால்.//
சமூகத்தில் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என தம்மைத் தாமே பெரியவர்களாகக் கருதிக் கொள்ளும் குடிகள். இந்த மேட்டுக் குடிகள் பற்றி ஆங்கிலேயர்களிடமும் இரு வேறான பிரிவுகள் உள்ளன.
அதாவது உயர்ந்த குடி/ மேட்டுக் குடி: Upper Caste
தாழ்ந்த குடியினர்: Lowest Caste
ம.தி.சுதா said...
///// வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் ////
இப்போ அந்தளவுக்கு இல்லை... அதிகமாய் மனிதம் வாழ்கிறது..//
வணக்கம் மதி சுதா, மனிதம் வாழ்கிறது எனும் தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். இன்றும் வன்னியில் வாழ்ந்த மக்களில் அதிகமானோர் இச் சாதிய முறைகளைப் பின் பற்றுகின்றார்கள்.
சமூகத்தில் உயர்ந்த சாதியின்ர் என்று கூறுவோர் தாழ்ந்த சாதியுடன் திருமணம் செய்ய இணங்குவார்களா? நடை முறைக்குச் சாத்தியமாகத விடயங்கள் தான் இப்போதும் நடக்கின்றன. இப்போதும் இந்த இறுமாப்பு எம்மவர்களிடத்தே பல ரணங்களுக்கும், வடுக்களிற்கும் பின்னார் ஆறாத புண்ணாக சாதிச் சண்டைகள் முதல், திருமண விவகாரங்கள் வரை பின்னிப் பிணைந்தே உள்ளது.
நல்ல அலசல் பதிவு பாஸ்..
ஹிஹி நானும் யாழ்ப்பாணத்தவன் என்பதால் அனைத்தும் அறிந்தவனே!!
வாங்கோ ஓட்ட வட நாராயணன், கடல் கடந்தும் எம்மவர்கள் திருந்தவில்லையா? சரி சரி எழுதுங்கோ. படிக்கிறோம்.
வாவ், அருமை அருமை நண்பர் இக்பால் செல்வன்.
அற்புதமான கருத்துக்களைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கும், ஆதர பூர்வமான விளக்கங்களிற்கும் முதற் கண் நன்றிகள்.
இக்பால் செல்வன் Said..
//7000 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆழிப் பேரலை இலங்கையையும் தென்னிந்தியாவையும் பிரித்தது என்பது புவியியல் ஆய்வாளர்களின் கருத்து. அப்படி நிற்க கி.பி 17 - ம் நூற்றாண்டு வரை அந்த ஆழிப் பேரலையின் தாக்கத்தால் ஈழத்தமிழர் தமது வரலாற்றை எழுதாமல் இருந்ததற்கான
காரணம் என்ன//
ஆழிப் பேரலையின் தாக்கத்தால் வரலாற்றை எழுதவில்லை என்று நான் எவ்விடத்திலும் கூறவில்லை. அக் காலப் பகுதி வரை அவர்கள் வரலாற்றை எழுதும் முறையினை ஆரம்பிக்க வில்லை என்றே கூறலாம்.
இக்பால் செல்வன் said...
இப்பதிவு ஒரு பொறியாக அமைந்தாலும், இப்பதிவில் ஏகப்பட்ட பிழைகளும், சொந்த அனுமானங்களும் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது.//
இங்கே சொந்த அனுமானங்களை நான் கூற முனையவில்லை சகோதரம். ஏற்கனவே, பதிவின் ஆரம்பத்திலே கூறியிருக்கிறேன். இலங்கையில் ஆதிக் குடிகளாக இயக்கர் நாகர் எனும் இரு இனத்தவர்கள் வாழ்ந்ததா. இலங்கை இந்தியாவுடன் தரைமார்க்கமாகத் தொடர்புபட்டிருந்த காலப் பகுதியிலும் இவ் இன மக்களே வாழ்ந்திருந்தார்கள் என்பதனைச் சுட்டியுள்ளேன்.
சொந்த அனுமானங்களை பதிவிடுவதை விடுத்து மூலாதாரங்களின் அடிப்படையில் வரலாற்று நூல்களைக் கையாண்டுள்ளேன். அவற்றினை நீங்கள் இறுதிப் பகுதியில் பார்த்தால் புரியும்,
//இலங்கை மக்கள் அத்தீவில் தோன்றியவர்கள் இல்லை. எதோ ஒருக் காலக்கட்டம் முதல் இன்று வரை வெளியில் இருந்து வந்த மக்களை உள்வாங்கிக் கொண்டு வந்த மக்களைக் கொண்ட நாடு//
இலங்கையில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளிற்குப் பின்னர் வந்த மக்கள் தான் வெளியில் இருந்து வந்த மக்கள். இம் மக்கள் வருவதற்கு முன்னர் இயக்கர் நாகர் என இரு இனத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
//பதிவரின் மையக்கருத்து இலங்கையில் இருக்கும் சாதிகள் தொழில் அடிப்படையிலானவை எனவும், அவை பிற்காலத்தில் வந்தவை என கூற முனைகிறார்.//
வேதங்களின் அடிப்படையில் இந்த்துக்கள், தமிழர்களிடம் இருந்த சாதிய முறைகள் பற்றி பதிவின் ஆரம்பத்தில் சுட்டியிருக்கிறேன். இதனடிப்படையில் தான் பிற்காலத்திலும் தொழிலை அடிப்படையாக வைத்து சாதிகள் உருவானதாக நிறுவியிருக்கிறார்கள்.
பிற்காலத்தில், இன்று வரை ஈழத்தில் தொழில் அடிப்படையிலும், காலதி காலமாக அத் தொழிலினைச் செய்து வரும் குலங்களின் அடிப்படையிலுமே இச் சாதிய முறைகள் தோற்றம் பெற்றன என்பதை நீங்கள் ஈழத்தின் சமூக மட்டங்கள் பற்றிய நூலாதாரங்களூடாக ஆராய்து பார்க்கலாம்.
இந்த இக்பால் செல்வன் எங்கிருந்து படித்துப் பிடித்திருக்கிறார் என்று தெரியவில்லை. போகும் வழியெல்லாம் இவரே கண்டுபிடித்த சாதி வேறுபாட்டுக் கருத்துகளைத் தூவிக் கொண்டே போகிறார். இவரது கற்பனைகளுக்கு அளவே இல்லை. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்துவிட்டு உளறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
சோழ குடிகள் தாம் இன்று தமிழகமெங்கும் மற்றும் யாழ்ப்பானமெங்கும் பரவி ஆதிக்க சாதிகளாக மாறியிருப்பதாக கதை கட்டுவது இக்பால் செல்வனது வழக்கமாகி விட்டது. ஆனால் பரவுதல் சீராகப் பரவவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சொட்டை விட்டு செட்டில் ஆகிவிட்டார்கள் போலும். அதான் இடத்துக்கு இடம் ஒரு ஆதிக்கச் சாதியாக இருந்து தொலைக்கிறது இன்று.
கூட இன்று நாடார்களுக்கு வேறு கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். எங்கே போய் நிறுத்துகிறார் என்று பார்ப்போம்.
// இதனடிப்படையில் தான் பிற்காலத்திலும் தொழிலை அடிப்படையாக வைத்து சாதிகள் உருவானதாக நிறுவியிருக்கிறார்கள்.
பிற்காலத்தில், இன்று வரை ஈழத்தில் தொழில் அடிப்படையிலும், காலதி காலமாக அத் தொழிலினைச் செய்து வரும் குலங்களின் அடிப்படையிலுமே இச் சாதிய முறைகள் தோற்றம் பெற்றன என்பதை நீங்கள் ஈழத்தின் சமூக மட்டங்கள் பற்றிய நூலாதாரங்களூடாக ஆராய்து பார்க்கலாம்.//
உங்களுடன் உடன்படுகிறேன்.
தமிழன் எந்த ஊரில் இருந்தாலும்..அவனிடம் இந்த சாதியமும் இருக்கும்..அந்த உணர்வும் இருக்கும் நிருபன்...அதை மாற்றவே முடியாது..நாட் ஒன்லி இலங்கை...
அவசியமான கட்டுரை!! சாதிகள் எப்போது தோன்றின எனும் கேள்விகளுக்கு எந்த நாட்டிலும் சரியான பதில் இருக்காது. எனினும் இதற்கு பதில் எழுத குறைந்த பட்ச விவரங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பதால் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.!! விவாத விசயங்களில் பங்கேற்கவில்லை!
இந்த கருமம் எங்கே தான் இல்லை. எப்ப நாகரீகம் என்று ஒன்று தோன்றியதோ... அப்பவும் சரி... நாகரீக காலம் என்று இப்பவும் சரி... இது விளையாடாத இடமே இல்லை.
இலங்கையில் மனித இனம் தோன்றவில்லை என்று தான் நான் கூறினேன் ! அதாவது மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி வழியாக பரவிய போது இலங்கைக்கும் இந்தியாவின் மார்க்கமாக வந்திருக்கிறது. அப்படி வந்த ஆரம்பக் குடிகள் தான் இயக்கர் / நாகர் எனப்படும் நெக்ரிட்டோக்கள் அவர்கள் தமிழர்களா என்பது நிரூபிக்க வேண்டியது ஒன்று !
சில இடங்களில் தங்களின் மொழி நடையை புரிந்துக் கொள்ள முடியாததாலும், பத்திப் பிரிக்காமல் விட்டதாலும் எம்மால் சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.... மீண்டும் படித்ததில் புரிந்துக் கொண்டேன். மன்னிக்கவும்....
வேதங்கள் அடிப்படையிலான சாதிகள் தான் இந்தியாவை ஆள்கின்றது, அது ஈழத்துக்கும் பொருந்தும். ஒத்துக்கொள்கிறேன் ....
//அக் காலப் பகுதி வரை அவர்கள் வரலாற்றை எழுதும் முறையினை ஆரம்பிக்க வில்லை என்றே கூறலாம்.//
புரிந்துக்கொண்டேன் நண்பா... மீண்டும் மொழி நடைச் சிக்கலால் .. மன்னிக்கவும்.
அதாவது நான் கூறியபடி ஈழத்தமிழர் மட்டுமில்லை எந்தத் தமிழரும் ஐரோப்பியர் வருகைக்கு முன் நீண்ட இன வரலாற்றை எழுதவில்லை.... ஏன் சிங்களவரும் தான்?
தமிழ் வரலாறுகள் பின்னர் நடத்திய ஆய்வினாலும், கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்கள், அகழ்வாய்வு துணைக் கொண்டு நிறுவப்பட்டவை.
அதே போலான கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், ஈழத்தமிழரிடம் இல்லாமல் போனது ஏன்? ஈழத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டு பெரும்பாலும் ஒன்று தமிழக வியாபாரிகளால் இடப்பட்டவை அல்லது தமிழகத்தில் இருந்து வந்த மன்னர்களால் நிறுவப்பட்டவை. அப்படியானால் ஈழத்தமிழ் மன்னர்கள் ஏன் கல்வெட்டை இடவில்லை, இலக்கியங்கள் படைக்கவில்லை, செப்பேடுகள் வைக்கவில்லை என்பது எனது வினா?
அதே போல தமிழ் மன்னர்கள் இலங்கையை ஆண்ட வரலாறு ஒன்றுமே தெரியவில்லை.... சிற்சில இந்திய சோழ மன்னர்களின் வருகையும் அவர்களின் ஆட்சியும் தான் மகாவம்சத்தில் கூறப்படுகிறது. அவர்களில் ஏலேலே சோழன், சேனன் - குத்திகன், ஏழு தமிழ் மன்னர்கள், அவர்கள் அனைவரும் சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள். அப்படியானால சேர, பாண்டிய நாட்டில் இருந்து சிங்கள் நாட்டினை ஒரு தமிழ் மன்னனும் ஆளவில்லையா? அல்லது மறைக்கப்பட்டு உள்ளதா?
இதற்கு பதில் ஒன்று சிங்கள் ஆரம்ப கால அரசுகள் சிங்கள அரசு இல்லை என்பதும், அது சேர- பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட சிற்றரசுகளாக இருத்தல் வேண்டும். பௌத்தம் சேர - பாண்டிய நாட்டில் பரவிய காலத்தில் சோழ நாட்டில் சமணம் பௌத்தத்தைக் காட்டிலும் அதிகம் பரவி இருந்ததாக அறிய முடிகிறது. அதனால் சேர -பாண்டிய நாட்டின் நிழலில் தான் சிங்கள நாடு உருவாகி வந்துள்ளது என்பது எனது முடிபு.
சிங்களவர்கள் தமது வரலாறாய்க் கூறும் மகாவம்சம் முற்றிலும் உண்மையைக் கூறாவிட்டாலும், அது முற்றிலும் பொய்யும் அல்ல என நாம் கொள்ளவேண்டும்.
மகாவம்சம் விஜயனின் வம்ச வரலாறைத் தான் கூறுகிறது, ஏனைய குலத்தவர் தமக்கென மரபுக் கதைளை வைத்திருந்ததாக அறிய முடிகிறது.
அதே போல இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களின் குருதி வழி ஆதிக்குடிகள் இல்லை. காலம் தொட்டு இலங்கைக்கு குடியேறிய மக்கள் தான். அவற்றில் பெரும்பான்மையானவர்கள் தென்னிந்தியா வழி வந்தவர்கள் என்பது உண்மை. [ http://www.karava.org/migrations_from_india ].
அதே போல சிங்கள் இனம் ஒட்டு மொத்தமும் வடநாட்டில் இருந்து வந்ததாக நம்பி வருவது பொய். அவர்களும் தமிழர்களில் இருந்து கிளைத்த ஒரு இனமே. சேர நாட்டு தமிழர்கள் மலையாளிகள் ஆனது போல, தாமிரப்பரணித் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகி உள்ளனர்.
இவற்றில் இன்றுள்ள ஈழத்தமிழர்களும் அடங்குவர். அதாவது ராசாநாயக்கத்தின் யாழ்ப்பாண வரலாறு கூறுவது போல, ஒரு காலத்தில் இத்தீவு முழுதும் தமிழ் பேசப்பட்டும், பின்னர் பிராகிருதம் கலந்து மணிப்பிரவாள மொழி நாடாக இருந்திருக்க வேண்டும்.
அதுவே பின்னர் 9ம் நூற்றாண்டில் சோழரின் ஆளுகைக்குள் வந்ததும். மணிப்பிரவாள மொழி பேசிய சிங்கள தீவு... சோழ நாட்டில் இருந்து தொடர்ந்து வந்த குடியேற்றத்தால் தமிழ் மயமாய் இருத்தல் வேண்டும். அதேக் காலக்கட்டத்தில் தான் சிங்கள் மொழித் தனித்து மொழியாக மாற்றமடைகிறது. இதற்கு முக்கிய காரணம் தென்னிலங்கை தனித்து இருந்தமையும், சிங்கள நாட்டின் - பாண்டிய நாட்டின் தொடர்பு இல்லாமல் போனதும் ஒரு காரணமே. பாண்டிய நாடும் அப்போது சோழர்களால தாக்கப்பட்டு வந்ததும் ஒரு காரணம்.
அய்யா பெயரில்லாதவரே ! //சோழ குடிகள் தாம் இன்று தமிழகமெங்கும் மற்றும் யாழ்ப்பானமெங்கும் பரவி ஆதிக்க சாதிகளாக மாறியிருப்பதாக கதை கட்டுவது இக்பால் செல்வனது வழக்கமாகி விட்டது.//
கதைக் கட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை.. இதை மறுத்து ஒரு நிரூபணம் அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வேன். நானும் ஒரு வேளாள - பிராமணக் குடியில் பிறந்தத்தால் அவர்களின் இன வரலாற்றை மிகுந்த ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறேன். அவர்கள் செய்த வரலாற்று அக்கிரமங்களை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.
முதலில் ஈழத்தில் இருக்கும் சாதிகள் விரிவாக ஆராயப்படவேண்டியவை. வேளாளர்கள் ஆதிக் காலம் தொட்டே இலங்கையில் இருந்தார்களா? இல்லை பிற்காலத்தில் வந்தார்களா?
யாழ்ப்பாணம் தவிர்த்து பிற இடங்களில் வாழும் வேளாளர் உண்மையில் வேளாளரா? வேளாளர்களின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் தான் அதிகம். சிங்கள் வேளாளரான கோவிகமர் எப்போது இலங்கைக்கு வந்தார்கள்.
குறிப்பாக வேளாளர் என்போர் விவசாயம் செய்யும் குடி. இவர்களின் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பரவிய போது, வேடுவர், மீனவர், ஆதிக்கத்தை தடுத்தார்கள். வேடுவர்கள் - hunters, மீனவர் - fisherman குடிகள் முறையே சேர பாண்டிய அரசினை நிறுவி இருத்தல் வேண்டும். இதற்கு உதாரணமே அவர்களின் கொடியும், வரலாறும், குலப்பெயர்களுமே. இந்த வேடுவர் - மீனவர் குலங்களே இலங்கக்குக்கும் ஆரம்பத்தில் குடியேறி இருத்தல் வேண்டும் என்பது எனதுக்கணிப்பு.
சரி வேளாளர் இனம் பெரு விவசாயக் கலாச்சாரத் தோற்றம் பெருவது கிபி 2-ல் கரிகாலச் சோழன் காடுகளை அழித்து பெருவிவசாயம் தோற்றிவித்தப் பின்னரே. ஆகவே வேளாளர்கள் தென்னிந்தியாவில் சோழ நாட்டில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
அந்த சோழர்களே அணைகள், கால்வாய்கள் கட்டியவர்கள். இவர்களின் இந்த வளர்ச்சி நிலையான நிலச்சுவாந்தர சமூகத்தை கட்டி அமைத்திருக்க வேண்டும். சோழர்களின் ஆளுகைக்கு பின்னரே முறையே பாண்டிய, சேர, சிங்கள் நாடுகளுக்கு விவசாயம் பரவி இருப்பதை வரலாறு கூறுகிறது.
உதா. சேர நாட்டின் மன்னனை மணந்து சென்ற சோழ்மாதேவி சோழ நாட்டில் இருந்து விவசாய குடிகளை வயல்நாட்டில் குடியமர்த்தி விவசாய சமூகமாக சேரநாட்டை மாற்றினார்.
அதே போல சிங்கள் நாட்டுக்கும் சோழர்களின் ஆதிக்கத்தால் விவசாயம் பரவி இருத்தல் வேண்டும். இதற்கு காரணம் பண்டைய சிங்கள் சொற்கள் விவசாய உபகரணங்கள், நெல் போன்றவை தமிழ் சொற்களாக அமைந்தது தான். அதே போல பெரும்பாலான குளங்களுக்கு சிங்களத்திலும் குளம் என்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது. அதே போல சோழர்கள் ஆளுகைக்கு உட்பட மும்ம்முடி சோழ் மண்டலத்தில் தான் குளங்களும், பாசண விவசாயம் வளர்ச்சிப் பெற்றுள்ளது.
ஆகவே வேளாளர் இனமானது சோழ நாட்டில் இருந்து குடியேறிக்க வேண்டும் என்பது எனது முடிபு. அதனைத் தான் மட்டக்களப்பு மான்மியம் குளக்கோட்டான் என்னும் மன்னரைக் கூறுகிறது. அதாவது சோழர்களின் ஆதிக்கமானது, தமிழ்நாட்டில் நடந்த நாயக்கரின் ஆதிக்கம் போல அமைந்து உள்ளது.
நாயக்கர்களின் குடியேற்றம் தமிழர் மத்தியில் நடந்தது போலவே வேளாளரின் குடியேற்றம் சிங்கள் தீவு மக்களின் நடுவே நடந்துள்ளது.
அடுத்து சிங்களவர்கள் ஆதிக்கால தமிழ் குடியேற்றவாசிகளே ! பௌத்த மதத்தழுவலும், மணிப்பிரவாள மொழி நடையும் அவர்களை தமிழர்களிடம் இருந்து பிரித்துள்ளது. கி.பி. 3 - 9 நூற்றாண்டு வரை தமிழகத்தினை களப்பிரரும், பல்லவரும் ஆண்டதால் .. தமிழின் ஆதிக்கம் மழுங்கிய காலம். அதனால் அதேக் காலத்தில் சிங்களத் தீவில் உருவாகிய மணிப்பிரவாளம் நன்றாக incubate செய்யப்பட்டுள்ளது. இதனைத் தான் ராசாநாயகம் யாழ்ப்பாண வரலாற்றில் கூறுகிறார். அப்போதையக் காலத்தில் இலங்கைத் தீவு முழுதும் ஒரே மொழிப் பேசிய தமிழ்-வேடுவ-மணிப்பிரவாளம் கலந்த மொழி பேசப்பட்டுள்ளது. ஆனால் அரசவையில் செம்மொழியாக பாலி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேக் காலத்தில் தமிழகத்தில் அரசவையில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எப்படி உறுதி செய்வது, சிங்கள் மொழியினை ஆய்வறிந்தால், பல தமிழ் சொற்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழில் குறைவான சிங்கள் சொற்கள் இருப்பது ஏன் ?
அதே போல பெயரில்லாதவர் கேட்டது போல வேளாளர் இலங்கையின் ஆதிக் குடிகளாகி இருந்தால் இலங்கை முழுதும் சீராக பரவி இருத்தல் வேண்டும் அல்லவா? இலங்கை மொத்த மக்கள் தொகையில் வேளாளர் மிகக் குறைவு. மாறாக யாழ்ப்பாணத்தில் வேளாளர் மிக அதிகம். விவசாயம் செய்ய உகந்தாத ஒரு மாவட்டத்தில் விவசாயக் குலம் நீடித்து இருக்க, விவசாயம் செய்யக் கூடிய பிற மாவட்டங்களில் அவர்கள் குறைவாக இருக்க காரணம் என்ன?
வேளாளர்கள் இலங்கைக்கு வந்த பிற்கால குடிகளே ! அதுவும் சோழ நாட்டில் இருந்து வந்தவர்களாக வேண்டும். அதனால் தான் அவர்கள் .. சோழ்னாட்டுக்கு மிக அருகில் அமைந்த யாழ்ப்பாணத்தில் மிகுந்து இருக்கிறார்கள், அதுவும் விவசாயத்துக்கு பயன்படாத ஒரு மாவட்டத்தில்.
ஆனால் வேளாளர்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்ததால சமூக அந்தஸ்து பெற்றவராய் இருந்திருக்க வேண்டும். சிங்களவரில் எழுந்த கோவிகம சாதி எப்படி பிற்காலத்தில் தான் தோன்றியது என்பதை இங்கு படிக்கலாம் [ http://www.karava.org/govi_supremacy_myth ]
குறிப்பாக யாழ்பாணம் தவிர்த்து ஏனையப் பகுதியில் மீனவர்களும் -குருகுலத்தாரும்-ஈழவர் என்னும் நாடார்களுமே வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களின் தோன்றல்களே இன்றைய பெரும்பான்மையான சிங்கள-ஈழத்தமிழர்கள்.
சமூகக் காரணங்களால இவர்கள் பல்வேறு காலங்களில் தம்மை வேளாளராக அறிவித்துக் கொண்டதாக வன்னி மான்மியம் என்னும் நூல் தெரிவிக்கின்றது.
அதாவது யாழ்ப்பாணம் தவிர்த்து ஏனைய பகுதி வேளாளர்கள் - குருகுலத்தாரும்-ஈழவர்களுமே ஆகும். [ http://www.nationmaster.com/discussion/encyclopedia/Karava ]
யாழ்ப்பாண வேளாளர்கள் சோழ நாட்டுக் குடிகள் இல்லை என்று யாராவது தக்க ஆதரத்துடன் எடுத்து வைத்தால் ஆதரிக்கலாம்.........
ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்
ரைட்டு... படிக்கலை.
இக்பால் செல்வன் said.//
அதேபோல மகாவம்சத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவை பல்வேறு சிறு சிறு தமிழ்மன்னர்கள் ஆண்ட செய்தி சொல்கின்றன. நீண்ட பரம்பரை ஆட்சி செய்ததாக தெரியவில்லை. ஒன்று வடக்கு இலங்கை தொடர்ந்து பாண்டியரின், சோழரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்து இருக்க வேண்டும். //
மன்னிக்கவும் நண்பா, குறு நில மன்னர்கள் 13ம் நூற்றாண்டின் பின்னரே முதன்மை பெறத் தொடங்குகிறார்கள். இதற்கு முன்னதாக இலங்கையைத் தமிழ் மன்னர்கள் பெரிய மன்னர்கள் ஆட்சி செய்ததாகத் தான் வரலாறுகள் கூறுகின்றன. இதற்குரிய வரலாற்று ஆய்வுகளைப் பார்ப்போமானல் மகாவம்சத்தின் கூற்றுப் படி ‘எளார எனும் சோள வம்ச மன்னன் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான் எனும் கூற்றினைக் கண்டு கொள்ளலாம். ஆகவே சிறு தமிழ் மன்னர்கள் ஆட்சிச் செய்தார்கள் என்பது தவறு சகோதரம்.
இக்பால் செல்வன் said...
உண்மையில் தமிழர்கள், தமக்கான ஒரு வரலாற்றை ஒரு போதும் எழுதியது இல்லை. ஆனால் தமிழ் வரலாறுகள், மன்னர் பாமாலைகளாலும், சங்கப் பாடல், போன்ற பல்வகை இலக்கியங்களாலும், கல்வெட்டுகளாலும் தான் கட்டப் பட்டு இருக்கின்றன.
சங்கப் பாடலில் வரும் ஈழத்து நாகனார் மற்றும் ஈழத்து குடுமிகன் எனறக் கல்வெட்டு மட்டுமே ஈழத்தமிழ் வரலாறு சொல்கின்றது. அதற்கு முன்னரோ, பின்னரோ, யாழ்ப்பாணத்திலோ, இலங்கையிலோ, ஆளுகை செய்த எந்தவொரு தமிழ் மன்னர்களின் கல்வெட்டோ, பாடல்களோ இல்லை ஏன் ???//
சகோதரம், தமிழிலக்கிய மரபின் படி முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையும், கி.மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் ஆறாம் நூற்றாண்டு வரையும், கடைச் சங்கம் ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் இருந்ததாக கூறுகின்றார்கள்.
இச் சங்க காலத்தில் கூறப்பட்ட கல் வெட்டின் அடிப்படையினைப் பார்த்தால் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குள் தானே இக் கல்வெட்டினை எழுதியிருக்க முடியும். இதனடிப்படையில் பார்த்தால் கி.மு காலத்த்திலிருந்தே அதாவது சங்க காலத்திற்கு நிகரான காலப் பகுதியிலிருந்தே தமிழர்கள் ஈழத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகும் தானே?
இக்பால் செல்வன் said...
இலங்கையில் மனித இனம் தோன்றவில்லை என்று தான் நான் கூறினேன் ! அதாவது மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி வழியாக பரவிய போது இலங்கைக்கும் இந்தியாவின் மார்க்கமாக வந்திருக்கிறது. அப்படி வந்த ஆரம்பக் குடிகள் தான் இயக்கர் / நாகர் எனப்படும் நெக்ரிட்டோக்கள் அவர்கள் தமிழர்களா என்பது நிரூபிக்க வேண்டியது ஒன்று//
இந்தப் பதிவில் எங்காவது ஓரிடத்திலாவது தமிழர்கள் தான் இலங்கையின் ஆதிக் குடிகள் எனும் வகையில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளனவா? நான் கூறிய விடயம் ‘இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் இயக்கர், நாகர் எனும் இரண்டு ஆதிக் குடிகள். இவர்களின் பின்னர் தான் நிலத்தோடு தொடர்புபட்டிருந்த இந்தியாவின் மூலமாகவும், கடற்கோளினால் பெயர்க்கப்பட்ட பிரதேசமான இலங்கையில் தமிழர்கள் குடியேறினார்கள் என்பதேயாகும்.
இலங்கையில் இயக்கர் நாகரிற்குப் பிறகு முதன் முதலில் காலூன்றியவர்கள் தமிழர்களே. சிங்களவர்கள் விஜயனின் வருகையினைத் தொடர்ந்தே இலங்கையில் வேரூன்றத் தொடங்குகிறார்கள்.
இக்பால் செல்வன் said...
அடுத்து சிங்களவர்கள் ஆதிக்கால தமிழ் குடியேற்றவாசிகளே ! பௌத்த மதத்தழுவலும், மணிப்பிரவாள மொழி நடையும் அவர்களை தமிழர்களிடம் இருந்து பிரித்துள்ளது. கி.பி. 3 - 9 நூற்றாண்டு வரை தமிழகத்தினை களப்பிரரும், பல்லவரும் ஆண்டதால் .. தமிழின் ஆதிக்கம் மழுங்கிய காலம். அதனால் அதேக் காலத்தில் சிங்களத் தீவில் உருவாகிய மணிப்பிரவாளம் நன்றாக incubate செய்யப்பட்டுள்ளது. இதனைத் தான் ராசாநாயகம் யாழ்ப்பாண வரலாற்றில் கூறுகிறார். அப்போதையக் காலத்தில் இலங்கைத் தீவு முழுதும் ஒரே மொழிப் பேசிய தமிழ்-வேடுவ-மணிப்பிரவாளம் கலந்த மொழி பேசப்பட்டுள்ளது. ஆனால் அரசவையில் செம்மொழியாக பாலி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேக் காலத்தில் தமிழகத்தில் அரசவையில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டுள்ள//
யாழ்ப்பாண வரலாற்றை ராசநாயகம் என்றொருவர் எழுதியதாக இதுவரை ஈழத்திலுள்ள எந்தவொரு நூல்களிலும் காணப்படவில்லை.
இன்னும் நிறைய விடயங்களை உங்களுக்கு ஆதார பூர்வமாகத் தரலாம். என்னுடைய இணைய இணைப்பு சீராக இயங்கவில்லை. இரவு வருகிறேன்.
நண்பரே முன்னர் (70 /80 ) யாழில் அதிகமாக சாதி வெறி இருந்தது உதாரணமாக பாடசாலைகளிலே ஆசிரியர்கள் கூட சாதி அடிப்படையில் மாணவர்களை ஒதுக்கிவைக்கும் சம்பவங்கள் நடந்திருக்கிறது,ஆனால் தற்சமயம் அன்று போல் இல்லை அதற்காக முற்றாக ஒழிந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை ஆனால் குறைந்துவருகிறது என்று என்னால் சொல்ல முடியும்.ஆனால் என்றோ செய்த தவறுகளுக்காக ஒரு சமூகத்தை "மேட்டுக்குடி" என்று சொல்லி மட்டம் தட்டுவது நியாயம் இல்லை.மாற்றம் என்பது ஒரே நாளில் வந்துவிடப்போவதில்லையே எல்லாம் மாறும் என்று நம்புவோம்.
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_23.html
pls read and comment the relavent article also
@ நிரூபன் // யாழ்ப்பாண வரலாற்றை ராசநாயகம் என்றொருவர் எழுதியதாக இதுவரை ஈழத்திலுள்ள எந்தவொரு நூல்களிலும் காணப்படவில்லை.//
தாங்கள் மட்டுமில்லை ஈழத்தமிழர்/சிங்களவர் பலருக்கு இலஙகையின் வரலாறறை நுணுக்கி ஆய்வறியவும், அல்லது வரலாறறை நூலைப் படிக்கவும் முடியாமல் போனது வேதனை தான் ......
இராசநாயகம் எழுதிய பழைய யாழ்ப்பாணம் என்ற நூல் யாழ்ப்பாண வரலாறை விரிவாக ஆராய்ந்த ஒரு சிறப்பான நூல், தொழ்பொருள் ஆய்வாளர், பல்கலைக் கழக விரிவரையாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியும்.
Ancient Jaffna by M.C. Rasanayagam
ISBN: 81 - 206 - 0210 - 2
வெளியிடாத நூல் என்றால் ISBN எண் இருக்காதே சார்...
வாழ்த்துக்கள் இதனைப் போன்று பல வரலாற்று நூல்ளைப் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கறேன்.. நன்றிகள்
தம்பி நிரூபன்,
நீங்கள் கூறியது விளக்கமாய் அமையாவிட்டாலும், நான் கூறியவைகள் தங்களின் பதிவுக்கு எதிர்வினையல்ல, மாறாக எனக்குத் தெரிந்தவைகளை விளக்கிக் கூறியுள்ளேன். நான் கூறியவைகள் அனைத்தும் உண்மை என்று எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. ஆனால் நான் கூறியவைகள் பொய் என்று எடுத்து வைக்கும் போது அதற்கான ஆதாரம் கொடுத்தால் மகிழ்வேன்.
எனதுக் கருத்து:
இலங்கையின் ஆதிக்குடிகள் நெக்ரிட்டோகள் - அந்தமானின் ஜரவாக்கள் - தமிழ்நாட்டின் இருளர்கள் - இலங்கையின் வேடுவர்கள் - ஆஸ்திரேலியாவின் பழங்குடி இவர்கள் தாம் இந்த பகுதி முழுதும் முதல் வந்த மனிதர்கள்.
பின்னர் பலகாலத்துக்கு பின் இந்தியாவில் வந்தேறிய திராவிடர்கள் - பூர்வ குடிகளோடு இனக்கலப்புற்று தமிழர்களாகினர் என்பது எனது வாதம்.
அதே போல கடற்கோள் பிரித்த பின்னர் எப்போது தென்னிந்தியர்கள் இலங்கைக்கு குடியேறினர் என்பதை ஆராய்ந்தால் மட்டுமே தமிழர் இலங்கைக்கு வந்ததன் காலத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
அடுத்தது சிங்களவர் என்ற இனமோ ஆரியர் என்ற இனமோ இலங்கைக்கு முதலிலும் வரவில்லை. விஜயன் என்ற மன்னனின் கதையும், நரசிம்ம என்னும் ஈழவர் - நாடார் மன்னனின் கதையும் ஒத்துப் போவதை இது வரை எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. அதனால் நாடார்களே இலங்கைக்கு சென்று குடியேறிய முதல் தமிழர்களாய் இருத்தல் வேண்டும். அல்லது மீனவர்களோடு அவர்களும் சென்றிருக்க வேண்டும். இந்தக் கதையை திரித்துத் தான் சிங்களவர் ஆரிய விஜயன் வருகை என சொல்லி இருக்க வேண்டும். ஆகவே தமிழர்கள் தான் இலங்கைக்கு வெளியே இருந்து வந்த முதற் குடி ஆக இருத்தல் வேண்டும். அந்த முதற்குடியின் வழி வந்தவர்களே இந்த தீவின் பெரும்பான்மை மக்கள் என்பது எனது வாதம். அது தமிழர்களாயினும், சிங்களவர்களாயினும் சரி.
இலங்கைக்கு வந்த வேளாளர் - கோவிகமர்கள் சோழர்களின் குடியேற்றத்தால் பின்னாளில் வந்தவர்கள். இதனைத் தான் சிங்களவர்களால் தமிழர்கள் பிற்காலத்தில் வந்துக் குடியேறியவர்கள் எனக் கூறக் காரணம்.
இரத்தினச்சுருக்கமாய் - சிங்களவர்கள் அனைவரும் தமிழ் வம்சாவளியினர் - ஆனால் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சிங்கள வம்சாவளியினர் இல்லை ..............
// இச் சங்க காலத்தில் கூறப்பட்ட கல் வெட்டின் அடிப்படையினைப் பார்த்தால் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குள் தானே இக் கல்வெட்டினை எழுதியிருக்க முடியும். இதனடிப்படையில் பார்த்தால் கி.மு காலத்த்திலிருந்தே அதாவது சங்க காலத்திற்கு நிகரான காலப் பகுதியிலிருந்தே தமிழர்கள் ஈழத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகும் தானே? //
அதனை நான் மறுக்கவில்லை. நான் கூறவருவது இலங்கையில் இன்று வாழும் சிங்களவர்களும், தமிழர்களும் புதிதாக முளைக்கவில்லை. ஆரம்பக் காலங்களில் இலங்கையில் குடியேறியவர்கள் தென்னிந்திய தமிழர்களே, பெரும்பாலானவர்கள் கேரளம் - பாண்டியத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் சங்க இலக்கியத்தில் சிலப் பாடல்களை எழுதியவர்கள். நான் கூறுவது கடைச்சங்க காலத்தில் இலங்கையை ஆண்டதாக மகாவம்சம் கூறும் மன்னர்கள் உண்மைதான். இதனை 2ம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் வரும் கயவாகு என்னும் இலங்கை மன்னன் தமிழகம் வந்ததாக கூறுகிறது. ஆனால் அதேக் காலத்தில் சிங்களம் முழுதுமாக பேசப்பட்டு இருந்தாக் சிங்களம் எனக் கூறி இருப்பார்கள், மாறாக ஈழம் என்றேக் கூறுகிறார்கள். அப்போது இலங்கை முழுதும் ஆண்டவர்கள்/வாழ்ந்தவர்கள் ஈழவர்கள். அவர்களின் மொழி தமிழாகவோ, தமிழ் கலந்த மணிபிரவாளமாகவோ இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் கள்ப்பிரர் காலம் வந்த பின் அங்கு கொஞ்சம் கொஞ்சமாய் சிங்கள் மொழி உருவாகி 12ம் நூற்றாண்டில் தான் சிங்கள் இலக்கணங்களும், இலக்கியங்களும் செம்மை பெறத் தொடங்கின. ஆகவே சிங்களவர்கள் ஆதிக்கால தமிழர்கள் என்பது என் கருத்து. வேளாளர்கள் இலங்கைக்கு வந்த பின்னாளையக் குடிகள் என்பது என் கருத்து.
அய்யா இக்பால் செல்வரே!
தர்க்க ரீதியாகவே இடிக்கிறது. plains இருப்பதை விதைக்கப் போட்டு அதையே தின்னு வாழ்ந்த குடி, எதுக்கு கரையோரமாகப் போய் மீனவனை ஒடுக்க வேண்டும்?
வெள்ளாமை செய்த ஒரு குடி ஆதிக்கம் பெற்றது என்றால் அதன் தொழில் காரணமாகவே அப்படி ஆகியிருக்க வேண்டும். பிசிக்கல் ஒடுக்கம் அல்ல. இன்றைக்கு சாப்ட்வேர் ஆட்கள் வாழ்கிறார்கள் விவசாயிகள் தேய்கிறார்கள் என்பதால் அவர்கள் விவசாயிகளை ஒடுக்குகிறார்கள் என்று அர்த்தமா? அரசாங்கத்தின் திட்டங்களே குறிப்பிட்டவர்கள் முன்னேறவும் மற்றவர்கள் பின்தங்கவும் காரணமாகின்றன.
//யாழ்ப்பாணம் தவிர்த்து பிற இடங்களில் வாழும் வேளாளர் உண்மையில் வேளாளரா? வேளாளர்களின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் தான் அதிகம். சிங்கள் வேளாளரான கோவிகமர் எப்போது இலங்கைக்கு வந்தார்கள்.//
என்னைக் கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். இலங்கையில் பிள்ளை சாதியினருக்கு வேளாளர் என்கிற பெயரும் உடன் இருக்கிறது. தமிழகத்தில் வேறு சாதியினருக்கும் வேளாளர் என்ற பெயர் உடன் இருக்கிறது. முன்னவர் சைவம், பின்னவர் அசைவம் தின்று சிறு கிராம தெய்வங்களை வழிபடுகிரவர்கள். எப்படி ஒன்று என்கிறீர்கள்?
//குறிப்பாக வேளாளர் என்போர் விவசாயம் செய்யும் குடி. இவர்களின் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பரவிய போது, வேடுவர், மீனவர், ஆதிக்கத்தை தடுத்தார்கள். வேடுவர்கள் - hunters, மீனவர் - fisherman குடிகள் முறையே சேர பாண்டிய அரசினை நிறுவி இருத்தல் வேண்டும். இதற்கு உதாரணமே அவர்களின் கொடியும், வரலாறும், குலப்பெயர்களுமே. இந்த வேடுவர் - மீனவர் குலங்களே இலங்கக்குக்கும் ஆரம்பத்தில் குடியேறி இருத்தல் வேண்டும் என்பது எனதுக்கணிப்பு.//
இதுவும் இடிக்கிறது. தென்னிந்தியாவில் பரவியவர்கள் என்றால் எங்கிருந்து? எப்படி மதுரையைத் தாண்டிச் சென்று தெற்கே சென்றார்கள்? ஒடுக்கக் கூடியவர்கள் என்றால் அங்கேயே இருந்து ஒடுக்கி அவர்களை ஒடுக்கி ஆள வேண்டியது தானே? மீனவருக்கு மதுரையில் என்ன வேலை?
உங்களது கணிப்பையும் அனுமானத்தையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். போகுமிடமெல்லாம் நீங்கள் இதைப் பற்றி எழுதுவதைக் கண்டு தான் கோபம். அப்போது என்ன நடந்தது என்பதை இப்போது ஆய்வு செய்து சொல்வது, சாருவின் தேகம் நாவலை சில நூற்றாண்டுகள் கழித்து படித்துவிட்டு, ஓ தமிழர்கள் அன்று இப்படித் தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கு சமம்.
வேளாளர் சோழ நாட்டில் இருந்து இலங்கைக்குப் போனவர்கள் - ஒரே எல்லையாக இருந்த ஊர்களைப் பிரித்து எப்படி இங்கிருந்து அங்குசென்றவர்கள் என்று உங்களால் கூற முடிகிறது?
ஆனால் சிங்களவர்கள் மிகத் தெளிவாக இந்துப் பெயர்களையும் (இந்திர ராம இத்தியாதி வகைகள்) வழக்கங்களையும் கொண்டிருப்பதைக் காணும் போது அவர்கள் ஆரியர்களே அன்றி வேறு எவர்?
ஐயா பெயரில்லாதவரே ! யாழ்ப்பாண வேளாளர் இலங்கையின் பூர்வ குடிகள் இல்லை. அவர்கள் சோழ்நாட்டில் இருந்து விரட்டப்பட்டப் போது யாழ்ப்பாணத்தில் வந்தேறிகளே !
முத்துதம்பி பிள்ளை எழுதிய யாழ்ப்பாண ராச்சியம் நூலில் அவர் அதற்கு முன் இருந்த யாழ்பாண வைபவ மாலை, செகராசசேகர் உலா ஆகிய நூல்களில் இருந்து கூறியுள்ளது இது தான். இவற்றை நான் புனையவில்லை, உமது யாழ்ப்பாணத்திலேயே நூறு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு நூலில் ஒரு வேளாளரே கூறியுள்ளார்.
அவர் தமிழகத்தில் இருந்து எந்த எந்த ஊர்களில் இருந்து எந்த எந்த குடும்பங்கள் யாழ்ப்பாணத்திலே குடியேறியது என்பதையும் அவர்கள் சாதியையும், அவர்களை ஆரியச் சக்கரவர்த்தி எங்கெல்லாம் குடியேற்றினார் எனக் கூறியுள்ளார்.
போய் படித்துப் பாருங்கள் முதலில் அந்த நூலினை. வேளாளர்கள் அரசியல் காரணத்துக்காகவே யாழ்ப்பாணத்தில் ஒதுங்கி அங்கே தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளார்கள்.
இரண்டாவது வேளாளர்களுக்கு முன் யாழ்பாணத்தில் வாழ்ந்தவர்கள் நாகர் வழி வந்த சிங்கள் இனம் ஆகும் என்பதை முதலியார் சி. இராசநாயகம் எழுதிய பழைய யாழ்ப்பாணம் ( 1921 ) என்னும் நூலில் குறிபிட்டு உள்ளார். பக்கம் 382-யில் போய் பார்க்கவும்...........
'' யாழ்ப்பாணத்தில் குடியேறிய வேளாளர்களால் அதற்கு முன்னே பூர்வ குடிகளாக் இருந்த தானைக்காரர், நழவர், கோவியர் என்னும் சிங்கள கலப்பு சாதியினரை தீண்டத்தகாதவர்கள் ஆக்கினார்கள் இவர்கள் ''
'' இவற்றில் நழவர் என்போர் பனை மரம் ஏறும் நாடார் சாதியினர் ஆவார்கள், இவர்களைத் தான் கேரளத்தில் ஈழவர் என்றழைக்கின்றனர் ''
இதனைத் தங்களால் மறுக்க முடியுமா?
// ஆனால் சிங்களவர்கள் மிகத் தெளிவாக இந்துப் பெயர்களையும் (இந்திர ராம இத்தியாதி வகைகள்) வழக்கங்களையும் கொண்டிருப்பதைக் காணும் போது அவர்கள் ஆரியர்களே அன்றி வேறு எவர்? //
தமிழர்கள் இலங்கையில் இராமநாதன், இந்திரன் போன்ற இத்தியாதி பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் ஆரியர் எனக் கூறினால் நீங்கள் ஏற்பீர்களா?
அந்த சிங்களாவரின் இத்தியாதி பழக்கவழக்கம் என்ன என்று தெளிவாக கூறினால் அறியலாமே ?
மீண்டும் வணக்கம் நண்பர் இக்பால் செல்வன் அவர்களே, வரலாற்று ஆசிரியர்களைக் கேட்டேன், தெரிந்து கொண்டேன், C.Rasanayagam எழுதிய Ancient Jaffna, எனும் நூல் Everymans publishers; Madras இல் 1926ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூலாகும்.
முதலாவது விடயம், என்னுடைய பதிவின் அடிப்படையில் நான் ஆரம்ப கால இலக்கியங்கள் வாயிலாக சாதியம் பற்றிய கருத்துக்களை ஆராய்து வினாக்களை முன் வைத்துக் கொண்டு செல்கிறேன். இலங்கையில் தமிழர் வரலாற்றை உள்ளடக்கி முதன் முதல் வெளி வந்த நூல் இராசமுறமை என்பதாகும், இதனையடுத்தே ஏனைய யாழ்ப்பாண வைபமாலை, மற்றும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னதான தமிழிலக்கியங்கள் பலவும் சாதியம் பற்றிக் கூறுகின்றன. நீங்கள் கூறும் இராசநாயகத்தின் நூலினைப் பற்றி அறிந்து தமிழ் முதுகலைமானி செய்யும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
இராசநாயகம் எழுதும் நூலானது முற்காலத்திலிருந்த சாதிய முறைகள் பற்றி தெளிவாக விளக்காது தமிழர் வரலாற்றை மட்டுமே பேசுகின்றது. ஆகவே இங்கே இராசநாயகத்தால் 1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலை வைத்து தமிழர் வரலாறு பற்றிய தகவல்களை மூலாதாரமாக உள்ளடக்கி சாதிய முறமைகள் பற்றிய கருத்துக்களை கண்டு கொள்ளலாம் என திணிப்பது தவறானது சகோதரம்.
ஈழத்தில் சாதியம் எப்போது மிக மிக ஆழமாக வேரூன்றி பெரு விருட்சம் பெறத் தொடங்குகிறது/ எப்போது முதன்மை பெறுகிறது என்றோர் வினாவினையும் அதற்கான விடை அடுத்தடுத்த பதிவுகளிலும் வரும் என்றேன். அதற்குள் முந்திக் கொண்டு இராசநாயகத்தால் 1926ம் ஆண்டு எழுதி தமிழ் நாட்டில் மெட்ராஸ் நகரிலுள்ள பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலை ஆதாரப்படுத்தி அந் நூல் வெளிவருவதற்கு முன்னரே தமிழ் வரலாறுகள் எழுதப்பட்ட காலப் பகுதியில் இருந்தே சாதியம் முதன்மை பெற்றது எனும் கருத்தினைத் திணிக்க முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.
‘’இப்போது தான் ஆட்டினை வெட்டுவது என்று முடிவெடுத்துள்ளேன். அதற்குள் முந்திக் கொண்டு ..... அறுப்போம், தலையை, வாலை அறுப்போம் என கிளம்புவது தவறானது. ஈழத்தில் சாதியம் வேரூன்றி, ஆதிக்கக் கிளைகளைப் பரப்பத் தொடங்கியது மறுமலர்ச்சி காலம் என இலக்கிய அறிஞர்களால் அழைக்கப்படும் காலப் பகுதிய்ல் தான். அதாவது 1940ம் ஆண்டுகளின் பின்னர் தான். இதற்கு முற்பட்ட காலப் பகுதியில் சாதியம் முளை கொண்டிருந்தாலும் மக்களின் அடிமனங்களில் ஆழ வேரூண்டத் தொடங்கியது பிற்பட்ட காலப் பகுதியில் தான்.
இக் காலப் பகுதியில் தான் ஈழத்தில் சாதியத்தை நேரடியாக சுட்டி, தலித்திய இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றன. கே. டானியலின் படைப்புக்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. அத்தோடு, மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன், முருகையன், மல்லிகை ஜீவா முதலிய ஆக்க இலக்கியவாதிகளும் இந்தச் சாதியத்தைப் பற்றித் தமது படைப்புக்களில் பலவாறான கருத்துக்களை விதைத்துச் சென்றுள்ளார்கள். இவர்களின் பின்னரான காலப் பகுதி ஈழத்து இலக்கியங்களில் இம் மறுமலர்ச்சி நிலையில் நின்று தடம் புரண்டு சமூக பிரச்சினைகள், போராட்டம், வாழ்வியல் அவலங்கள், ஜனரஞ்சக விடயங்கள் முதலியவற்றைத் தம் உட்கிடக்கையாகக் கொண்டு தோற்றம் பெற்றிருந்தன.
அண்ணா இக்பால் செல்வனிற்கு, (நீங்கள் என்னைத் தம்பி என்று அழைத்த பிறகு அண்ணா என அழைப்பதில் தவறில்லைத் தானே சகோதரா)
ஈழத்தில் தமிழர் வரலாறு பற்றி தமிழர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள் என்று பார்க்கும் போது ‘இராசமுறமை, வையாபாடல், திருகோணமலையிலுள்ள கோணேசர் கல்வெட்டு, முதலியன சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
இவ் இடத்தில் ‘கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலின் 16ம் பக்கத்தில் கூறப்பட்ட கருத்துக்களை உற்று நோக்குதல் சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.
‘’எழுத்துருவில் உள்ள ஆவணங்களுடன் தான் வரலாறு ஆரம்பிக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட வரவிலக்கணம் ஆகும். இதன் வழி பார்த்தால் இலங்கைத் தமிழரின் பெரும் பகுதி வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகவும், வழி வழி வந்த கதைகளாகவுமே உள்ளன. இந்த நிலையில் தொல்லியற் சான்றுகள், கல்வெட்டுக்கள், குறிப்புக்கள் போன்ற சான்றுகளே தமிழரின் ஆரம்ப கால வராறுகளைச் சரியான முறையில் வெளிக் கொண்டு வரும் ஊடகங்களாக விளங்கியிருக்கின்றன.
ஐரோப்பியர் வருகைக்கு முன்னதான ஆரம்பகாலத் தமிழிலக்கியப் படைப்புக்களில் ‘வையாபாடல்’ தமிழர் வரலாறு பற்றி ஓரளவிற்குச் சொல்கின்றது.
இது வையாபுரி ஐயரினால் கி.பி பதினான்காம் நூற்றாண்டில் கி.பி பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் எழுதப்பட்டது.
நிற்க, இவ் இடத்தில் ஒரு கருத்தினைச் சொல்லி சாதியம் பற்றிய விளக்கத்திற்கு ஆதாரம் சேர்க்க நான் முனைகிறேன். ‘ஈழத்தில் இந்தியாவில் இருந்து வந்த உயர் குலத்தவர் என அழைக்கப்படும் பிராமணர்களே சமூகத்தில் தமது இருப்பினை ஆரம்ப காலத்தில் முதன்மைப்படுத்தியவர்களாக விளங்குகிறார்கள். மன்னர்களாகவும், இலக்கியங்களை எழுதுகின்றோராகவும், கல்வி கற்பிப்போராகவும் இப் பிராமணர்களே விளங்கியிருக்கிறார்கள். இக் காலப் பகுதியில் பிராமணியம் என்றோர் சாதி இருந்திருக்கிறது, ஆனால் வேளாளர்களைப் போல பிராமணர்கள் மேட்டுக் குடி எனும் கிறுக்குப் பிடித்தவர்களாகவோ, கர்வம் உடையவர்களாகவோ வாழ்ந்திருக்கவில்லை. ஆதலால் தான் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் பிராமணியம் பற்றிய ஆதிக்க, சாதியம் சார் கோட்பாடுகள் இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பினும் முதன்மை பெறாமற் போய் விட்டது என்று கூறுவது ஏற்கத் தக்க விடயம் தானே?
நல்லதொரு முயற்சி நண்பரே ! நீங்கள் இதனை உங்கள் பதிவில் விளக்கி விட்டு தொடர்ந்து இருந்தால் புரிந்துக் கொண்டு இருப்போம். எனதுப் பதில்கள் அனைத்துமே வரலாற்று ரீதியானது. இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் எம்மை மன்னிக்க ...
எனது வாதங்களை அல்லது கருத்துக்களை கூறிவிடுகிறேன் ....
சாதியம் என்பது இலங்கையில் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக இருந்துள்ளது.
வேளாளரின் வருகைக்கு பின்னரே சாதிய வெறி அங்கு அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து வந்த நாயக்கர் -
உள்ளூர் தமிழர்களை தீண்டத்தகாதவர் ஆகியது போல, சோழ நாட்டில் இருந்து வந்த வேளாளர் ஈழநாட்டுக் மக்களை தீண்டத்தகாதவர் ஆக்கியுள்ளனர்.
சாதியம் ஈழத்தில் 1940 களுக்கு முன்னரே வேரூன்றியது மட்டுமில்லை, பல கலவரங்களையும் சந்தித்து உள்ளது.
தலித் இலக்கியங்கள் ஈழத்தமிழர் மத்தியில் சமூக விடுதலை வேண்டி நிற்பதை மஹாகவி, முருகையன், ஜீவா ஆகியோரின் இலக்கியங்களில் நான் படித்துள்ளேன். அவற்றை தவறு எனக் கூற முடியாது..........
உமது பதிவுகளை எதிர்பார்க்கிறேன். எமது வாத விவாதங்களை மேலும் ஆதாரத்துடன், எடுத்து வைக்க அவா. வாழ்த்துக்கள்.......
முத்துக் கவிராசரின் கைலாயமாலை(கிபி பதினாறாம் நூற்றாண்டு) மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை(கிபி 18ம் நூற்றாண்டு) என்பன யாழ்ப்பாண இராச்சியம் சார்ந்த தமிழர்களின் இராச்சிய, கலாசார முறமைகளை அறிவதற்குச் சிறந்த சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
இங்கே இன்னொரு விடயத்தை உற்று நோக்குதல் சிறந்தது;
பிரித்தானியர் காலப் பகுதியில் எழுதப் பெற்ற வரலாற்று நூல்களில் பின்வருவன அடங்கும், எஸ் காசிச்செட்டியின் 'History of Jaffna'(1884) துரையப்பாபிள்ளையின் ‘Jaffna Today And Yesterday'(1907ம் ஆண்டு நூல்) முத்துத்தம்பிப் பிள்ளையின் History of Jaffna(1912) க. வேலுப்பிள்ளையின் ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’(1918) இராசநாயகத்தின் ‘Ancient Jaffna'(1926ம் ஆண்டு வெளியான நூல்) ஞானப்பிரகாசரின் ‘Critiques of Jaffna'(1928),’யாழ்ப்பாண வைபவமாலை, “The Jaffna Kingdom' 'The Ancient people of SriLanka are Tamil's, 'யாழ்ப்பாணப் பூர்வீக வைபவம்’ யாழ்ப்பாணக் குடியேற்றம் முதலியவை ‘’இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த வரலாற்று நூல்களாகும்.
அதன் பின்னர் கே. கணபதிப்பிள்ளையின் ‘இலங்கை வாழ் தமிழரின் வரலாறு’, சி.எஸ் நவரட்ணத்தின் ‘Tamil's and Ceylon' என்ற நூல்களும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த தமிழரைப் பற்றிப் பெரிதும் அறிந்து கொள்ளப் பயன்படும். இருந்த போதிலும், இந்த இலக்கிய ஆக்கங்கள் யாழ்ப்பாணம், அதன் இராச்சியம், அதன் மக்கள் என்பவை பற்றியே எடுத்துச் சொல்கின்றன.
''இவற்றில் வரலாற்றுச் சான்றுகள் இல்லாமையால் இவை பெருமளவிற்கு பின் வந்த வரலாற்று அறிஞர்களால் புறந்தள்ளப்படுகின்றன. பிரதாபக் கதைகள், காவியங்கள், நாட்டார் கதைகள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றையே இவ் இலக்கியங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இராசநாயகம், ஞானப்பிரகாசர் ஆகியோரின் இலக்கியங்களில் ஓரளவிற்கு விதிவிலக்காக இருந்தாலும், இவ் இருவரின் திறமை காரணமாக ஒரு சில வரலாற்று உண்மைகள் வெளி வந்துள்ளனவே தவிர, இவ் ஆக்கங்கள் தொல்லியல் சான்றுகளுடன், ஆதார அடிப்படையில் அமையாத காரணத்தால் வரலாற்று அறிஞர்கள் இவற்றை ஏற்ற்க் கொள்ளத் தயங்குவது போல் உள்ளது.’’
மேற் கூறப்பட்ட பத்தி கலாநிதி மு. குணசிங்கம் அவர்களின் ‘இலங்கையில் தமிழர் எனும் நூலில் இருந்து உங்களுக்காக, இராசநாயகத்தின் நூலின் உட் கிடக்கையினைப் பற்றி விபரிக்கும் முகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.’
இக்பால் செல்வன் said...
நல்லதொரு முயற்சி நண்பரே ! நீங்கள் இதனை உங்கள் பதிவில் விளக்கி விட்டு தொடர்ந்து இருந்தால் புரிந்துக் கொண்டு இருப்போம். எனதுப் பதில்கள் அனைத்துமே வரலாற்று ரீதியானது. இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் எம்மை மன்னிக்க ... //
சகோதரம், சபாஷ் சரியான போட்டி, உங்களின் அறிவும், தேடலும் என்னை வியக்க வைக்கிறது. ஈழத்தில் பல பதிவர்கள் இருந்தும் அவர்களை விடவும் பல கடல் மைல்கள் தொலைவில் இருக்கும் உயிரின் உறவான நீங்கள், தாய்த் தமிழக சகோதரனான நீங்கள் எங்கள் ஈழம் பற்றி அதிக விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனும் போது மெய் சிலிர்க்கிறது அண்ணா.
சகோதரம் உங்களின் தேடல், ஈழம் பற்றிய வரலாற்றினை அறியும் ஆர்வம், வாதிடும் திறமை ஆகியவற்றிற்கு வாழ்த்துக்கள் தோழா. தொடர்ந்தும் உங்களின் விவாத நோக்கிலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இதில் எங்கள் அறியாமைகளை நீக்கித் தெளிவடைகிறோம். பிறகு எதற்கு மன்னிப்பு. அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு எனும் வார்த்தையை பயன்படுத்துவது பிரித்துப் பார்ப்பது போலாகி விடும்:)
நல்லது சகோதரனே ! தங்களின் கருத்துகளும், பொறுமையான ஆழமான பதில்களும் என்னைக் கவர்ந்து உள்ளது. மேலும் இந்தப் பதிவை தொடர்பதிவாக எழுத எனது வாழ்த்துக்கள் ....
வேளாளர் குடியில் பிறந்தாலும், வேளாளர் வரலாறை ஆய்வறிந்தாலும், வேளாளர் இடைக் காலங்களில் செய்த சாதியக் கொடுமைகளையும் ... அது இன்று வரை தொட்டு தொடர்வதையும் கடுமையாக நான் எதிர்க்கிறேன் ... .
சாதிய வெறி ஓங்கிய யாழ்ப்பாணம் ஒரு சமத்துவ யாழ்பாணமாய், முற்போக்கு யாழ்பாணமாய், தமிழ் யாழ்பாணமாய் மாற வேண்டும்.. அதற்காக தங்களைப் போன்ற இளம்தலை முறையினரின் முன்வருதல் மிகவும் பாரட்டப் பட வேண்டிய விசயம்.......
அதே போல யாழ்பாணத்தவர் தமக்கு முன் இருந்த வரலாறை அறிவியல் ரீதியாக எழுதாமல் விட்டுச் சென்றக் குறையை உம்மைப் போன்றவர்கள் முன் நின்று தொடர வேண்டுவது அவசியம். அதில் நம் சொந்தக் கருத்தை வைக்காமல்... அறிவியல் ரீதியாக அனைவரும் புரியும் படி தொடர வாழ்த்துக்கள்......
//ஆனால் வேளாளர்களைப் போல பிராமணர்கள் மேட்டுக் குடி எனும் கிறுக்குப் பிடித்தவர்களாகவோ//
இதற்கு முக்கியக் காரணம் உண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிரமாணர்களின் கிறுக்குத்தனமும், ஈழவ பிரமாணர்களின் கிறுக்குத்தனமும் வெவ்வேறாய் இருப்பதை நான் பார்த்துள்ளேன்.
அதாவது ஈழப் பிரமாணர்கள் நேரிடையாக வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.
மாறாக உள்ளூர் தமிழ் சாதிகளில் இருந்தும் அல்லது மணமுறையாலும் தொடர்புப் பட்டிருக்க வேண்டும்.
வேளாளர் என்போர் வெளியில் இருந்து வந்தமையால் தமது ஆதிக்கத்தை பிற உள்ளூர் சாதிகள் மீது காட்டி தமது இருப்பை உறுதி செய்துள்ளனர். இதற்கு, சோழ பேரரசும், அதன் பின்னான் யாழ்ப்பாண அரசும் உதவி உள்ளன. அதனை தொடர்ந்து வந்த டச்சு, ஆங்கில அரசும் அவர்களுக்கு உதவின. போர்த்துகேய அரசு வேளாளருக்கு முரணாய் அமைந்தததால் தான் பிற சாதிகள் கத்தோலிக்கம் ஆகி இருக்க வேண்டும்.
இலங்கையின் விடுதலைக்குப் பின் அவர்களின் ஆதிக்கம் சிங்கள ஆதிக்கத்தால் நிலைகுழைந்து இருக்க வேண்டும். அந்தக் காலகட்டதில் ஈழ தலித்கள் சமூக விடுதலை வேண்டி போராடி இருத்தல் வேண்டும்.
ஈழப் போராட்டத்தில் கூட தலித்களின் பங்கு தான் அதிகம். பெரும்பாலான ஆதிக்கச் சாதி புலம் பெயர்ந்து விட்டது.
//அப்போதையக் காலத்தில் இலங்கைத் தீவு முழுதும் ஒரே மொழிப் பேசிய தமிழ்-வேடுவ-மணிப்பிரவாளம் கலந்த மொழி பேசப்பட்டுள்ளது.//
சரி இன்று சிங்கள மொழியையும் உங்களது கூற்றுப்படி அதே கலப்பு கொண்ட மலையாளத்தையும் மற்றும் யாழ்பாணத் தமிழையும் ஆராய்ந்து பாருங்கள். மலையாளமும் யாழ்பாணத் தமிழும் மிக நெருங்கியதாகவும், சிங்களம் பாலியை நெருங்கியதாகவும் இருக்கும். சில தமிழ் சொற்கள் கலந்ததால் எல்லாம் சிங்களம் ஆதித் தமிழாகிவிடாது. மேலும் சிங்களத்தின் ஸ்க்ரிப்ட் அடிப்படை என்ன? மலையாளத்தின் ஸ்க்ரிப்ட் எதனை அடிப்படையாகக் கொண்டது? இதையும் பாருங்கள்.
//விவசாயம் செய்ய உகந்தாத ஒரு மாவட்டத்தில் விவசாயக் குலம் நீடித்து இருக்க, விவசாயம் செய்யக் கூடிய பிற மாவட்டங்களில் அவர்கள் குறைவாக இருக்க காரணம் என்ன?//
வேறன்ன? சிங்கள ஒடுக்குமுறை தான்.
//யாழ்ப்பாண வேளாளர்கள் சோழ நாட்டுக் குடிகள் இல்லை என்று யாராவது தக்க ஆதரத்துடன் எடுத்து வைத்தால் ஆதரிக்கலாம்....//
சோழ சேர ஆளுகைக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது எனது அனுமானம்.
//அதே போல சிங்கள் இனம் ஒட்டு மொத்தமும் வடநாட்டில் இருந்து வந்ததாக நம்பி வருவது பொய். //
நீங்கள் வேளாளரா என்பது தெரியவில்லை. ஆனால் பார்ப்பனர் என்பது தெளிவாகிறது.
நீங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து நிறைய படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அங்கே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும் புரிதலில் எங்கே என்ன தவறு இருக்கிறது என்று.
தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அதனால் தமிழ் ஆதிசமஸ்கிருதம் ஆகிவிடுமா? தமிழர்கள் ஆதிஆரியர்கள் ஆகிவிடுவோமா?
இக்பால் நீங்களும் உடனுக்குடன் பதிலிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விக்ரமசிங்கே என்ற பெயரும், ராமநாயகே என்ற பெயரும், இன்றைய தமிழகத்தில் நிலவும் சமஸ்கிருதப் பெயர்களை விட, வடநாட்டில் இன்று நிலவும் பெயர்களுடன் அதிகம் ஒத்துப் போகின்றன. மேலும், தமிழுடன் கலந்த சமஸ்கிருதம், ன் அல்லது ம் கொண்டு முடியும். ரஜீந்தர மற்றும் ராஜேந்திரன் - எது தமிழ் என்று சில காலம் வடநாட்டில் பிழைப்பு நடத்திய என்னால் சொல்ல முடியும்.
நீங்கள் நிரூபிக்க நினைப்பது, இன்றைய தமிழகத்து ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஈழத்து ஆதிக்கச் சாதிகள் - இவர்கள் எல்லோரும் வந்தேறிகள். சிங்களவர்கள், சமஸ்கிருதம் கலந்த மொழி பேசும் பூர்வகுடிகள். ஆஹா..
//வேளாளரின் வருகைக்கு பின்னரே சாதிய வெறி அங்கு அதிகரித்துள்ளது.//
அப்படியா?? சாதி என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது என்று தெரியும் தானே? இனக்குடிகளாக தத்தம் தொழில் செய்து கொண்டு இருந்தவர்களை எல்லாம் வர்ணங்களாக பிரித்துப் போட்டது வேளாளர்களா? இது தெரியாமல் போயிற்றே எங்களுக்கு. (இதனைச் சொல்வதன் மூலம் வேளாளர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நான் நியாயப்படுத்தவில்லை என்று தெளிவு படுத்திவிடுகிறேன்)
இறுதியாக ஒன்று - விவசாய வெள்ளாமை செய்தவர்கள் அவர்களின் விளைச்சலுக்கு கிடைத்த சந்தை காரணமாக பிற குடிகளின் பால் தொழில் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே நேரம், அவர்கள் தான் சாதிவெறிக்கு மொத்த காரணம் என்பது மிகத் தவறான தகவலாகும். காரணம், வடஇந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி ஆதிக்கம் செலுத்துபவர்கள் விவசாயிகள் அல்ல. தத்தம் தொழில்களைக் கொண்டு பண்டமாற்றம் செய்து ஓரளவு ஏற்றதாழ்வுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில், தீண்டாமை என்ற பெயரில் சில இனக்குடிகள் தாழ்த்தப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்களே காரணம். நாயக்கர்கள் பின் வந்தவர்களே.
இன்று மலையாளிகள் அனைவரும் சமஸ்கிருதம் சார்ந்த மொழி பேசுவதால் அவர்கள் வடநாட்டில் இருந்தா வந்தார்கள். அவர்களும் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களே ! அதே போல் தான் சிங்கள் மொழி பேசுபவர்களின் மொழியில் பாலி ஆதிக்கம் செலுத்துவதால் அவர்கள் யாவரும் வடநாட்டவர் என்பது மிகவும் தவறானக் கருத்து ஆகும்.
// அதே போல மலையாளத்தையும் ஈழத்தமிழையும் உற்றுப் பாருங்கள் !!! இரண்டுக்கும் சில தொடர்பு இருக்கிறது, அது எப்படிச் சாத்தியம் ஆகியது, இடையில் இருந்த தென்பாண்டி மண்டலத்தைத் தாண்டி காற்றில் கலந்து வந்தததோ. அருகருகே இருக்கும் மொழிகளில் சொற்கலப்பு ஆவது இயற்கை. ஆனால் சிங்களத்தில் தமிழ் சொற்கள் கலந்துள்ள வேளையில், ஏன் ஈழத்தமிழில் சிங்கள்ச் சொற்கள் கலப்படம் ஆகவில்லை? விளக்க முடியுமா உங்களால் ....//
//யாழ்ப்பாணத்தவர் சேர் சோழருக்கு இடைப்பட்டது என்றால் என்ன? பாண்டியராக இருப்பார்களோ?//
விக்கிபீடியாவில் இருந்து நான் ஒரு சுட்டியைக் கொடுத்ததால் விக்கிபீடியா என்னும் குப்பையைத் தான் நான் படித்தேன் என எப்படி உங்களால் கூற முடியும். நான் நினைக்கிறேன் நீங்கள் அதைக் கூடப் படிப்பதில்லை என்று.
//அங்கே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும் புரிதலில் எங்கே என்ன தவறு இருக்கிறது என்று//
நீங்கள் எங்கே வாழ்ந்தவர் - எமது பாட்டனார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் என்றப் படியால் எனக்கு யாழ்ப்பாணத் தோழர்கள் இந்தியாவில் அதிகம் இருந்தமையால் எனக்குத் தெரிந்தவைகளை எடுத்து வைக்கின்றேன். நான் கூறுவது பிழை என்று ஆதாரப்பூர்வமாய் கூறினால் ஏற்றுக்கொள்வேன்.
//தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அதனால் தமிழ் ஆதிசமஸ்கிருதம் ஆகிவிடுமா? தமிழர்கள் ஆதிஆரியர்கள் ஆகிவிடுவோமா?//
சும்மா காமெடிப் பண்ணாதீங்க சார் ! தமிழ் மொழியில் தான் இந்திய மொழிகளிலேயே சமஸ்கிருதம் மிகவும் குறைவாக கலந்துள்ளது............... சிங்களவத்தில் பாலி அதிகம் கலந்திருப்பதால் அவர்கள் ஆரியர் என்பது மடத்தனம். மலையாளத்திலும், தெலுங்கிலும் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்துள்ளது. அதனால் அவர்கள் எல்லாரும் ஆரியரா? இன்றளவும் ஐரிஷ், வேளிஷ் மொழியில் ஆங்கிலம் கலப்புற்று இருப்பதால் செல்டிக் எல்லாம் ஜெர்மானியர்கள் ஆவார்களா?
//விக்ரமசிங்கே என்ற பெயரும், ராமநாயகே என்ற பெயரும், இன்றைய தமிழகத்தில் நிலவும் சமஸ்கிருதப் பெயர்களை விட, வடநாட்டில் இன்று நிலவும் பெயர்களுடன் அதிகம் ஒத்துப் போகின்றன //
நீங்கள் யாழ்ப்பாணத்தவரா? அப்படி இருந்தால் உங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்திருக்காது. விக்கிரமசிஙகே என்ற சிங்களப் பெயரில் உள்ளதைப் போல ஈழத்தமிழர்களில் விக்கிரமசிங்கம், பூபாலசிங்கம், என்ற பெயர்கள் எல்லாம் அதிகம், அதே போல நாயக்கர் வழி பெயர்களான நாயக்கே என்ற பெயர் சிங்களத்தில் இருப்பது போல நாயக்கம் என்றப் பெயர் வட இலங்கையில் சர்வ சாதாரணம் அய்யா. முதலில் யாழ்ப்பாண போங்கள் அங்கே உள்ளவரோடு பார்த்துப் பழுகுங்கள் புரிந்துக் கொள்வீர்கள். அது மட்டுமின்றி சிங்கே ஆர்யா என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை 400 ஆண்டுகள் தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். அவர்கள் யாவரும் என்ன ஆரியரா? அந்த மன்னர்களே தமது குலத்துக்கு ஆரியச் சக்கரவர்த்தி என்று அழைத்தார்கள். அவர்கள் குலத்தில் வந்த அரசக் குடும்பத்தார் சிலர் எனக்கு நண்பர்கள் என்ற முறையில் கூறுகிறேன். ஆரியப் பெயர்கள் அக்கால கௌரவம் கருதி வைத்தார்களே ஒழிய தமிழர்களும், சிங்களவர்களும் திராவிடர்களே !
சாதி என்ற சொல் ஜாதி என்ற வடமொழிச் சொல் இதனை சிங்களத்தில் ஜாதிய எங்கின்றார்கள். நான் கூறும் சாதியம் முழு இலங்கைக்கும் ஆனது அல்ல, மாறாக வடக்கே யாழ்ப்பாணத்தில் எப்படிச் சாதியம் முளைத்தது. அங்கு ஒடுக்கப்பட்ட சாதிகள் யாவரும் மண்ணின் மைந்தர்களே ! மாறாக தமிழர்களில் இருக்கும் வேளாளரும், சிங்களவர்களிலும் இருக்கும் கோவியரும் இந்தியாவில் இருந்து சோழப் படையெடுப்பால் வந்தேறி நாட்டை ஆக்கிரமித்தவர்கள். உதாரணமாக தமிழ்நாட்டுக்கு வந்த நாயக்கரைப் போல, தமிழ்நாட்டில் இருக்கும் நாயக்கர் சிலர் தெலுங்கு பேசி வருவதும், சிலர் தமிழராய் மாறியதும் போல வேளாளர் சிலர் சிங்களவர் ஆயினர். சிலர் தமிழராய் இருக்கின்றனர்.
//அவர்கள் தான் சாதிவெறிக்கு மொத்த காரணம் என்பது மிகத் தவறான தகவலாகும். காரணம், வடஇந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி ஆதிக்கம் செலுத்துபவர்கள் விவசாயிகள் அல்ல. //
வேளாளார் தான் மொத்தக் காரணம் என்றிலலை, ஆனால் வேளாளரின் ஆதிக்கத்தால் பரவிய இந்து மதம் தான் சாதிய வெறிக்கு முக்கிய காரணமாகும். வடநாட்டில் சாதி ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் பிராமணரும், சத்திரியரும், ஜாத் போன்ற விவசாய சாதிகளுமே ஆகும். இதே நிலைத் தான் தமிழகத்திலும் பிராமணரும், சத்திரியரான வன்னியரும், சூத்திரரான வேளாளருமே ஆகும். கேரளத்திலும் பிராமணரான நம்பூதிரிகளும், சத்திரியரான நாயர்களும் ஆகும்.......... இதே நிலைத் தான் யாழ்ப்பாணத்திலும் இருக்கின்றது.
பார்ப்பன ஆதிக்கச் சாதி ஊடுவரலால் கூட இணைந்துக் கொண்ட வேளாளர், சத்திரியர்கள் போன்றவர்கள் தான் தீண்டாமைக் கொடுமையை தமிழகத்தில் நிகழ்த்தினார்கள். சோழருக்கு பின் சிதைந்து ஓடிய வேளாளரின் இடத்தை பின் வந்த நாயக்கர் நிறைப்பிக் கொண்டு வழிநடத்தினார்கள்.
//இன்றைய தமிழகத்து ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஈழத்து ஆதிக்கச் சாதிகள் - இவர்கள் எல்லோரும் வந்தேறிகள். சிங்களவர்கள், சமஸ்கிருதம் கலந்த மொழி பேசும் பூர்வகுடிகள்//
//தமிழகத்து ஆதிக்கச் சாதியில் சிலர் வந்தேறிகள் உதா. பிராமணர், நாயக்கர், ரெட்டியார், போன்றோர். வேளாளர், வன்னியர், படையாச்சி, முதலியார், கௌன்டர் போன்ற வேளாளரின் உபசாதிகள் யாவும் தமிழகக்குடிகளாயினும், அவர்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு பிராமண வருணாசிரமத்தை இங்குத் திணித்தார்கள். இலங்கையில் வேளாளர் வந்தக் குடிகளே, பிற சாதிகளான நழவர், தானைக்காரர், கோவியர், கரவார் யாவரும் அந்நாட்டில் முதலில் குடியேறி வாழ்ந்து வந்த மக்கள்..... வேளாளர், கோவிகமர், பிராமணர், நாயக்கர் போன்றோர் தமிழ்நாடு ஊடாக அங்கு வந்தேறியவர்கள் என்பது எனது வாதம். சிங்கள் மக்களில் பெரும்பாலான சாதிகள் அங்கு வாழ்ந்த வந்த தமிழர்களே பின்னாளில் மலையாளிகளைப் போன்று சிங்களவர் ஆகி உள்ளனர். சேர நாட்டில் வந்த இந்து மதமும், சமஸ்கிருதமும் மலையாளிகளைத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது. தாமிரபரணி நாடான இலங்கையில் வந்த பௌத்த மதமும், பிராகிருதமும் சிங்களவர்களாக தமிழர்களை மாற்றியது என்பது எனது வாதம். இதைத் தான் இலங்கை வரலாற்று ஆசிரியரான பரணவிதானவும் கூறுகிறார். ஆனால் இனவெறிப் பிடித்த தமிழர்களும், சிங்களவர்களும் இதனை ஏற்க மறுக்கின்றனர்................ என்ன செய்ய இனவெறி இருந்தால் தானே சண்டையிட முடியும்................. மலையாளிகள் தமிழர்களின் சகோதரம் போல, சிங்களவரும் தமிழர்களின் சகோதரமே //
இக்பால் செல்வன் said...
மகாவம்சம் விஜயனின் வம்ச வரலாறைத் தான் கூறுகிறது, ஏனைய குலத்தவர் தமக்கென மரபுக் கதைளை
வைத்திருந்ததாக அறிய முடிகிறது//
மீண்டும் வணக்கங்கள் சகோதரா,
இவ் இடத்தில் தாங்கள் விட்டிருக்கும் வரலாற்றுத் தவறைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இலங்கையின் ஆரம்ப கால வரலாறானது அனுராதபுர இராச்சிய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது. இங்கே தாங்கள் எடுகோளாகக் குறிப்பிடும் ‘பாளி நூலான மகாவம்சம்(பாளி மொழியில் எழுதப்பட்ட) இலங்கையின் ஆரம்ப கால வரலாற்றைப் பௌத்த- சிங்கள வரலாறாகக் காட்ட முனைந்திருக்கிறது.
இந் நூல் எழுதப்பட்ட காலப் பகுதி கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி எனப் பொதுவாக அறிஞர்கள் கருதுவர். இந் நூலை எழுதியவர் மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்கு ஆவார். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போதும், இந் நூற்றாண்டிலிருந்து பத்து நூற்றாண்டுகள் முற்பட்ட வரலாற்றுத் தகவல்களை இந் நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களினால் மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் என உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கி.மு 300ம் ஆண்டினைத் தொடர்ந்து வருகின்ற பல வரலாற்றுச் செய்திகளை பிற கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது சில நம்பகத்தன்மைகளை இந்த மகாவம்சம் கொண்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
‘இந் நூலின் அடிப்படை நோக்கம் பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தினை அக்கால மக்களின் ஆன்மீகத் தேவை கருதி ஆன்மீகத் திருப்திக்காகச் சொல்லுவதேயாகும் என இம் மகாவம்சத்தின் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்.
சகோதரன் இக்பால் செல்வன் குறிப்பிடுவது போல மகாவம்சம் விஜயனது வம்ச வரலாற்றினை கூறவில்லை. மாறாக அனுராதபுர காலப் பகுதியில் பிரபலம் வாய்ந்து விளங்கிய பௌத்த நிறுவனமான ‘மகாவிகாரை’ என்ற பௌத்தப் பள்ளியை முழுக்க முழுக்க மையப்படுத்தியே இந் நூலினை எழுதியுள்ளார் இம் மகாவம்ச ஆசிரியர். ஆகவே இதனை ஒரு தல புராணமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர, விஜயனது வம்ச வரலாற்று நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது இலங்கையில் உள்ள வரலாற்று ஆசிரியர்களான பேராசிரியர் இந்திரபாலா, கலாநிதி குணசிங்கம் முதலியோர்களின் ஆய்வின் வெளிப்பாடு.
நிரூபன்....சுகம்தானே.
அற்புதமான பதிவும் அலசல்களும் ஆரோக்யமான விவாதங்களும்.
இக்பால் செல்வன் இன்னும் நிறையவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி அவருக்கும்.
வடையண்ணா சொன்னதுபோல சாதி கொஞ்சம் மறைந்திருக்கிறதே தவிர யாரும் மறந்துவிடவில்லை.சாதி என்றால் என்னவென்றே தெரியாத இங்கு பி்றந்து வளர்ந்த குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக் கொடுத்து பிரித்துப் பார்க்க வைக்கிறார்கள்.இது நான் கண்ணால் கண்டது.ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தை முழுசியடிக்குது.இப்ப என்ன செய்யப்போறீங்கள்...இப்ப என்ன சொல்லப்போறீங்கள் !
http://www.sishri.org/tt2.html
இக்பால் செல்வன் - இதைக் காண்பீராக. வேளாளர்கள் சாதி ஆட்டம் போட்டிருக்கின்றனர் என்பதை மறுக்க மாட்டேன். அக்காலத்தில் இருந்த நிலையை இக்காலக் கண்ணோட்டத்தில் நோக்குதல் தவறு.
நிரூபன் - இந்தத் தளம் உங்களுக்கு ஏதேனும் வகையில் உதவியாக இருக்கலாம். நேரமிருப்பின் இதைக் காணுங்கள்.
இதுவும் அத்தளத்திளிருந்தே எடுக்கப்பட்டது.
http://www.sishri.org/kalathai.html
//தமிழகத்திலோ ஐந்திணைகளும் ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதையே காண்கிறோம்.//
ஒரு காலத்தில் வேளாளர்கள் அனைவருக்கும் கீழ்நிலையிலே இருந்துள்ளனர். பின்னர் நடந்த மாற்றங்களால் உயர்வுபெற்று இன்று உயர்சாதியினர் போல தோற்றமளிக்கும் நிலையை அடைந்துள்ளனர் என்பதையே இத்தளம் சொல்கிறது.
யாழ்ப்பாணத்தின் மேலும் சில சாதிப் பெயர்களைத் தாங்கள் தவறவிட்டுள்ளீர்கள். அவையாவன, ஒன்று திமிலர் என்போர். இவர்கள் ஒரு வகையான மீன் பிடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பெயர், "தவசியர்" என்பதாகும். இவர்கள் வலி வடக்கில் ஒரு ஊரில் மட்டுமே மிகக் குறைந்தளவில் வாழ்கின்றனர்.
Post a Comment