Sunday, November 24, 2013

பிரபாகரனை மறந்த ஈழச் சமூகம்!!

ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். 
இது போன்று சுவாரஸ்யமான செய்திகளை அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
தாங்குவோர் ஏதுமின்றி தமிழர்கள் அனைவரும் சிங்கள ஆட்சியாளர்களின் சொற் கேட்டு அடங்கி ஒடுங்கி வாழ்வார்கள் எனப் பலர் கனவு கண்டு கொண்டிருந்த பொழுதில் பகலவன் போன்று ஒளி கொடுக்க அவதரித்த விடுதலைச் செம்மல் தான் பிரபாகரன். 1954ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 26ம் திகதி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும், வேலுப்பிள்ளை பார்வதி அம்மையாருக்கும் பிறந்த கடைசி மகனாகிய இவர் இன்று உலகையே ஈழத்தின் பக்கம் உற்றுப் பார்க்க வைத்த விடுதலைப் பேரொளியாக விளங்குகின்றார்.போராளிகளால் அண்ணன், அண்ணை என்றும், பொது மக்களால் தலைவர் என்றும், அவர் வளர்த்தெடுத்த பெற்றோரை இழந்த காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை குழந்தைகளால் மாமா என்றும் சிறப்பிக்கப்படுகின்ற பெருமைக்குரியவரும் இவரே! 

கரிகாலன் எனும் பெயராலும் அழைக்கப்படுகின்ற பிரபாகரன் அவர்கள் தம் உயிரைத் தம் இனம் வாழத் தற் கொடையாக கொடுக்கவல்ல கரும்புலி அணியினரை உருவாக்கிய பெருமை மிகு போராளியுமாவார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரிலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்களான திரு. காசி ஆனந்தன், திரு புதுவை இரத்தினதுரை ஆகியோரால் தம்பி! எனச் செல்லமாக அழைக்கப்பட்டுப் பாடல்களில் விளிக்கப்பட்ட பெருமைக்குரியவரும் இவர் தான். தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுத் தமக்கான விடுதலையினைப் வென்றெடுக்கப் போராட வேண்டும் என நினைத்து தனக்கான வழியினைத் தேர்ந்தெடுத்தார். நெருங்கிப் பழகுவோர்க்கு; பழகுதற்கு இனிமை கொண்டவராகவும், பகைவர் சேனை தமிழர் மண்ணைச் சூறையாட வந்த போது புயலாய் எதிர்த்து நின்று பகை விரட்டிய பெருமைக்குரியவராகவும் இவர் விளங்குகின்றார்.

கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவராக இவர் இருந்த காரணத்தினால் தான் பகைவர்களையும், துரோகிகளையும்,தமிழர்களைச் சிதைத்தோரையும் அழிப்பதற்குத் தயங்காதவராக விளங்கினார். இதனால் உலக அரங்கில் விஷமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளை அவர் புலிகள் அமைப்பினரை வழி நடத்திய காலத்தில் எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது. பிரபாகரன் ஒரு தீவிரவாதி! அவர் உருவாக்கிய புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு. பிரபாகரனைப் பின்பற்றிய மக்கள் பயங்கரவாதிகள்! இந்தக் கருத்திற்கு மாற்றுக் கருத்து எங்கும் உண்டா! ஆம் பிரபாகரன் ஒரு தீவிரவாதி தான்! தான் கொண்ட கொள்கையில் எதிரிகளே வியந்து நோக்கும் வண்ணம் தீவிர பற்றுறுதியோடு இறுதி வரை, தன் அருகே கடைசிப் போராளி நிற்கும் வரை களத்தில் நின்று போராடினார் அல்லவா. அதனால் அவர் ஓர் தீவிரவாதி!
இது போன்று சுவாரஸ்யமான செய்திகளை அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
அவர் கொண்ட கொள்கையினை, தன் போராட்ட நியாய வாதத்தினை உயிரிலும் மேலாக நேசித்தாரே! இந்த அர்த்தத்தின் அடிப்படையில் அவரைத் தீவிரவாதி என்பதில் ஏதும் தவறிருக்கா? தமிழில் இலக்கணப் பொருட் பிரிவு தெரியாத மூடர்கள் சொல்லும் இனிமையான வார்த்தைகள் இவை! இதற்கான அர்த்தத்தினை நாம் அறிந்து அகம் மகிழாது இருக்கலாமோ? பிரபாகரனும், அவர் உருவாக்கிய புலிகள் அமைப்பும் உண்மையிலே பயங்கரவாதிகள் தான்! தாம் கொண்ட கொள்கையினை, தம் மண்ணை, தமது நியாய வாதத்தினைப் பயங்கரமாக நேசித்தார்களே! உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகள் தானே! துரோகிகளையும், சுய நலவாதிகளையும் இலகுவில் இனங் கண்டு கொள்ள முடியாத மென்மையான உள்ளம் படைத்த பிரபாகரன் செய்த மகா தவறு. என்ன தெரியுமா?

ஒட்டு மொத்த ஈழ மக்களையும் நம்பி விடுதலைப் போரினைக் கையில் எடுத்தமையாகும் அல்லது சுய நலத் தமிழர்களுக்காகவும் தான் ஓர் பொது நலவாதி எனும் அடிப்படையில் களமாடப் புறப்பட்டமையாகும். தானும், தன் குடும்பமும் வாழ்ந்தால் சரி என்று லண்டனிலே ஐந்து லட்சம் பேரும், கனடாவிலே ஐந்து லட்சம் பேரும் ஏனைய ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் 10 இலட்சம் தமிழர்களும் தம் சுய நலத்தோடு வாழுகின்ற போது, எல்லாத் தமிழர்களும் ஈழத்தின் இறுதிப் போர் இடம் பெற்ற மையப் பகுதியினை விட்டு வெளியேறி விடுதலைப் பாரத்தினை இளைய சந்ததிகளின் கையில் கொடுத்து விட்டுச் சுய நலத்தோடு சென்று விட, தான் மட்டும் மூன்று இலட்சம் மக்களை நம்பி நின்று மன உறுதியோடு களமாடிய பொது நலவாதி அல்லவா பிரபாகரன்!

அவர் உளத் திறன் எப்படி இருக்கும் என்பதனை நினைக்கையில் உள்ளமெல்லாம் இனம் புரியாத ஓர் சிலிர்ப்பு ஏற்படுகின்றது அல்லவா? தமிழர்களுக்கான தனியரசு உருவாக வேண்டும் எனும் நோக்கில் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஆரம்ப காலத்திலிருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டுப்பெரும் பகுதியிலும், பின்னர் வன்னிப் பகுதியிலும் வெளி நாட்டில் இருக்கின்ற தொழில் நுட்பங்களையெல்லாம் தன்னுடைய போராளிகளை அனுப்பி அறியந்து வரச் செய்து; கட்டுமானங்களையும், நிர்வாக சேவைகளையும் அறிமுகப்படுத்தித் தொலை நோக்கோடு தமிழர்களின் எதிர்காலத்திற்காகச் சிந்தித்தார் பாருங்கள்! ஈழம் வேண்டும் எனும் கொள்கையில் நின்ற மக்களையும், ஈழம் வேணாம் தாம் உழைத்தும் தம் உயிரினைக் காப்பாற்றியும் வாழ வேண்டும் என்னவும் நாட்டை விட்டு விலகியோருக்காகவும் போராடினார் பாருங்கள்!
ஈழத்தை விட்டும், புலிகள் பகுதிகளை விட்டும் நாமெல்லாம் புலம் பெயர்ந்த காரணத்தினால் தானே புலிகளின் போராட்டத்திற்கான நிதியுதவி கிடைத்தது. சர்வதேச ரீதியிலான பிரச்சாரப் போர் இடம் பெற்றது என நீங்கள் மார் தட்டிக் கூறினாலும், எல்லோரும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக ஈழக் கனவினைச் சுமந்திருந்தால், சுய பொருளாதாரத் தன்னிறைவோடு ஈழப் போரில் எம்மாலான பெரும் பணியினைப் பலர் ஆற்றியிருக்க முடியுமல்லவா? போராட்டம் நிறைவடைந்த பின்னர் பிறக்கும் தமிழீழத்தில் வந்து தம் கால் பதிப்போம் எனச் சூளுரைத்த சுறணையற்ற ஜென்மங்களுக்காகவும், அவர்களையும் ஈழத் தாயின் பிள்ளைகள் எனக் கருதிப் போராடினாரே! அந்த மகானின் ஈகத்திற்கும், கடமை உணர்விற்கும் ஈடாக ஏதும் அவனியில் உண்டா?
இது போன்று சுவாரஸ்யமான செய்திகளை அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
காவல் துறை, வருவாய்த் துறை, (Tax Offive) நிதித் துறை, ஊடகத் துறை, வானியல் அவதானிப்பு நிலையம், கால நிலை அவதானிப்பு மையம், பாலுற்பத்தி நிலையம், வன வள பாதுகாப்பு சபை, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (விவாசயத் துறை), போக்குவரத்துப் பிரிவு, வங்கி, நீதிமன்றம், ஒலிபரப்பு மையம், ஒளிபரப்பு நிலையம், தொலைத் தொடர்பு சேவை, மருத்துவ சேவை, தமிழர்களின் அபிவிருத்திக்கான புனர்வாழ்வுக் சேவை, விலங்குகள் பராமரிப்பு சேவை, உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள், மாவீரர் பணிமனை, எனப் பலதரப்பட்ட மையங்களை நிறுவித் தமிழரின் புரட்சிகரமான அபிவிருத்தி பற்றி சிந்தித்த முதல்த் தமிழன் எனும் பெருமைக்குரியவரும் இவரே!

பிரபாகரனால் உருவாக்கப்பட்ட போராளி குழுக்களின் வீரத்தினை இவ் உலகம் வியந்து பார்ப்பது போன்று தான் உருவாக்கிய ஏனைய கட்டுமானத் துறையில் உள்ளோரும் திறமையானவர்களாகச் செயற்பட வேண்டும் எனச் சிந்தித்த பெருமைக்குரியவர் இவராவார். தமிழர் தம் வரலாற்றில் வான் படை கண்ட முதல்த் தமிழன் எனும் பெருமைக்குரிய திரு பிரபாகரன் அவர்கள், தன்னுடைய போராட்ட அமைப்பினருக்காக கிட்டு பீரங்கிப் படை, தரைப் படை, கடற் படை, விமானப் படை,  விக்ரர் கவச எதிர்ப்பு அணி, குட்டி சிறீ மோட்டார் படையணி, புலனாய்வுப் படை, மோட்டார் சைக்கிள் அணி (உந்துருளி அணி), விமான எதிர்ப்பு அணி (ராதா வான் காப்பு படை) எனப் பல படைப் பிரிவுகளையும் உருவாக்கியிருந்தார்.

தன் அருகே இருந்து யார் துரோகம் இழைத்தாலும், அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணத்தினால் ஆரம்பத்தில் தன் நண்பரைப் போலவே துரோகிகளையும் நேசிக்கும் இளகிய மனம் கொண்டவரும் இவரே. இதற்கு உதாரணமாக 1989ம் ஆண்டின் பிற் பகுதியில் மாத்தையா அவர்கள் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போது ஓர் நாள் பிரபாகரன் அவர்கள் முன்னே செல்ல, பிரபாகரன் பின்னே சென்ற மாத்தையா பிரபாகரனைச் சுட்டுக் கொலை செய்யும் நோக்கில் தன் கைத் துப்பாக்கியினைத் தூக்கி குறி பார்த்திருக்கிறார். இதனைக் கண்ணுற்ற பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர் பிரபாகரனிடம் இது பற்றிக் கூற, பிரபாகரனோ நம்ப மறுத்து விட்டார். உடனனியாக அப்போது மெய்ப் பாதுகாவலராக இருந்த போராளியையும் பணியிலிருந்து நீக்கினார் பிரபாகரன்.

மாத்தையா புலிகளுக்குத் துரோகமிழைத்த பின்னர், அவரது துரோகச் செயற்பாடுகள் புலிகளின் புலனாய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் பிரபாகரன் அவர்கள் மாத்தையாவின் மற்றுமோர் முகத்தினை உணர்ந்து கொண்டார். இந்தளவு தூரம் குழந்தை மனம் கொண்டவராகவும் ஈழ மக்கள் வாழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்குவமை இல்லாத தலை மகன் தான் இவர். காலங்கள் கடந்தாலும், பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலை அமைப்பினரின் தியாகங்களும், பிரபாகரன் அவர்கள் ஈழத்தில் வாழும், வாழ்ந்த விடுதலை வேண்டிய தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் அனைத்தும் இந்த ஞாலத்தில் நினைத்து வாழும் என்பதில் ஐயமில்லை!விடுதலை வேண்டிய, மற்றும் விடுதலைக்கான பாதையில் பயணித்த மக்கள் மனத் திரைகளில் இன்றும் சிரித்தபடி பிரபாகரன் அவர்கள் வீற்றிருக்கிறார்! தலைவர் எங்கே எனத் தேடும் பலர், உங்கள் உள்ளத்தினுள் பிரபாகரன் வீற்றிருக்கின்றார் என்பதனை அறியாதவர்களாக அல்லவா இருக்கின்றார்கள்.

1 Comments:

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

நல்லதொரு கட்டுரை...
விரிவான பார்வை...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails